நிறைய உதவி செஞ்சிருக்கீங்க.. எதையுமே மறக்க முடியாது.. அம்பானிக்கு ரிஷி கபூர் மனைவி நன்றி!
மும்பை: கடந்த 2 ஆண்டுகளாக தங்கள் குடும்பத்துக்கு அம்பானி குடும்பம் பல உதவிகளை செய்துள்ளதாக மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மனைவி நீத்து கபூர் நன்றி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான ரிஷி கபூர் கடந்த ஏப்ரல் 30ம் தேதி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார்.

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தையான ரிஷி கபூரின் மறைவுக்கு இந்திய திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
ரிஷி கபூரின் மனைவியும் நடிகையுமான நீத்து கபூர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொழிலதிபர் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை நீண்ட பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
அதில், "எங்கள் குடும்பத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகள் நீண்டதொரு பயணமாகவே இருந்தது. சில நாட்கள் சந்தோஷமாகவும், சில நாட்கள் சில சங்கடங்கள் நிறைந்தும் சென்றன. ஆனால், அம்பானி அவர்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல், இந்த நீண்டதொரும் பயணத்தை நிச்சயம் எங்களால் கடந்திருக்க முடியாது.
கடந்த இரு ஆண்டுகளில் எண்ணற்ற வழிகளில் எங்கள் குடும்பத்தினருக்கு, அம்பானி குடும்பம் செய்த உதவிகள் கணக்கில் அடங்காது. அதிலும், குறிப்பாக கடந்த 7 மாதத்தில், கேன்சரால் போராடி வந்த நடிகர் ரிஷி கபூரை கண்ணும் கருத்துமாக அம்பானி குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபரும் கவனித்துக் கொண்டதை வார்த்தைகளால் சொல்லி மாளாது.
மேலும், மருத்துவமனைகளில் ரிஷி கபூர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் காலத்தில் நேரடியாகவே மருத்துவமனைக்கு வந்து, எங்கள் கைகளை பற்றிக் கொண்டு, முகேஷ் அம்பானி, நீட்டா பாபி, ஆகாஷ், ஸ்லோகா, ஆனந்த் மற்றும் இஷா ஆகியோர் காட்டிய அன்புக்கு என்றென்றும் கடமை பட்டு இருக்கிறோம்" என நீத்து கபூர் பதிவிட்டுள்ளார்.
கடந்த திங்கட் கிழமை எச். என். ரிலையன்ஸ் மருத்துவமனையில், கணவர் ரிஷி கபூருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவித்து நீத்து கபூர் பதிவிட்டு இருந்த நிலையில், தற்போது கடந்த இரு ஆண்டுகளாக நடிகர் ரிஷி கபூரின் உடல் நிலை சீராக வேண்டும் என போராடிய அம்பானி குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications












