வங்கிக் கணக்கில் ரூ.3000.. தாராளம் காட்டும் சல்மான் கான்.. உயரக் குறைபாடு உள்ளவர்களுக்கும் உதவி!
மும்பை: சினிமாவில் நடிக்கும் துணை நடிகர்களில் உயரக் குறைபாட்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கும் 45 பேருக்கு தலா ரூ. 3000 அவர்களது வங்கிக் கணக்கில் சல்மான் கான் செலுத்தியுள்ளார்.
Recommended Video
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் வாடும் மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார்.
கொரோனா விழிப்புணர்வு குறித்த வீடியோக்களையும் வெளியிட்டு மக்களை வீடுகளில் பாதுகாப்பாக இருங்கள் எனக் கூறியுள்ளார்.

30 கோடி
கொரோனா நிவாரண நிதிக்கு டோலிவுட் நடிகர்கள் தாராளமாக உதவி வந்த நிலையில், பாலிவுட் நடிகர்கள் தாங்கள் மட்டும் என்ன சளைத்தவர்களா என போட்டா போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு நல உதவிகளை செய்து வருவது ஆரோக்கியமான விஷயம் தான். பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி நிதி ஒதுக்கிய அக்ஷய் குமார், மும்பை கார்பரேஷனுக்கு 3 கோடியையும், மும்பை காவல் துறைக்கு 2 கோடி நிதியும் இதுவரை கொடுத்துள்ளார்.

கோதுமை பைகளில் பணம்
நடிகர் ஆமிர் கான் சத்தமின்றி, ஒரு கிலோ கோதுமை பைகளில் ஏழை எளிய மக்களுக்கு ரூ.15,000 வைத்தபடி நூற்றுக்கணக்கான பைகளை கொடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால், அதை ஆமிர் கான் தான் கொடுத்தாரா? அல்லது வேறு யாராவது கொடுத்தார்களா என்பதே தெரியாத வண்ணம் உதவி செய்துள்ள அந்த உள்ளத்திற்கு மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

25000 தொழிலாளர்களுக்கு உதவி
சமீபத்தில், சினிமா துறையில் தினக்கூலிகளாக வேலை செய்யும் 25,000 தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளிலும் தலா 3000 ரூபாயை நடிகர் சல்மான் கான் செலுத்தி உள்ளது பாலிவுட் ரசிகர்களை வாயடைக்க செய்திருக்கிறது. நாடு முழுவதும் போடப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக சினிமா கலைஞர்கள் பசியால் வாடக் கூடாது என சல்மான் கான் இதனை செய்துள்ளார்.

வங்கிக் கணக்கில் பணம்
25000 சினிமா தொழிலாளர்களுக்கு தலா ரூ. 3000 என்றால் அதுவே கிட்டத்தட்ட 7 கோடி ரூபாய்க்கும் மேல் வருகிறது. இந்நிலையில், யாருமே கண்டுகொள்ளாத Vertically Challenged என அழைக்கப்படும் உயரக் குறைபாடு உள்ள 45 பேரின் வங்கிக் கணக்கில் தலா 3000 ரூபாயை சல்மான் கான் செலுத்தியுள்ள தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

சல்மான் பாய்க்கு நன்றி
சல்மான் கான் நடிப்பில் வெளியான பாரத் படத்தில் அவருடன் நடித்த Vertically challenged கலைஞரான ராணா தனது வங்கிக் கணக்கில் 3000 ரூபாய் செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார். மேலும், சினிமாவில் எங்களை போன்ற கலைஞர்களும் இருக்கிறார்கள், அவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என நினைத்த சல்மான் பாய்க்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

மொத்தம் 95 பேர்
FWICE எனப்படும் அமைப்பின் கீழ் இந்த சினிமா கலைஞர்கள் அங்கம் வகிக்கின்றனர். சல்மான் கானின் உதவியை அறிந்த அதன் தலைவர் உயரக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மொத்தம் 95 பேர் இருக்கின்றனர். இதுவரை 45 பேருக்கு உதவி செய்துள்ள நடிகர் சல்மான் கான் மீதம் உள்ளவர்களுக்கு உதவுவதாக வாக்களித்துள்ளார் எனக் கூறிய அவர், அவரது நல்ல உள்ளம் பாராட்டுதலுக்குரியது என்றார்.


Click it and Unblock the Notifications











