ஆர்யன் கான் போதை பொருள் விவகாரம்.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட மேலும் 6 பேர் கைது!
மும்பை: போதை பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மும்பையில் இருந்து புறப்பட்ட எம்பிரஸ் சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்தி போதைப் பார்ட்டி நடக்க இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சாதாரண பயணிகளை போன்று கப்பலில் ஏறிய அதிகாரிகள், போதை பார்ட்டி நடப்பதை அறிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போதைப் பார்ட்டியில் பங்கேற்ற ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 10 பேர் கையும் களவுமாக பிடிப்பட்டனர்.

அக்டோபர் 7ஆம் தேதி வரை
20 மணி நேர விசாரணைக்கு பிறகு வாட்ஸ் அப் சாட் உரையாடல்களை அடிப்படையாக கொண்டு ஆர்யன் கானை போதை பொருள் தடுப்பு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட ஆர்யன் கானை அக்டோபர் 7 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் 6 பேர் கைது
இந்த விவாகரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஷாருக்கான் மகனுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். ஷாருக்கானுக்கு எதிரான சதி என்றும் பாலிவுட் பிரபலங்கள் கொதித்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்பாட்டாளர்கள் உட்பட 6 பேர் கைது
போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கப்பலில் இரண்டு நாள் பயணத்தை ஏற்பாடு செய்த டெல்லி ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமான நமஸ்க்ரே எக்ஸ்பீரியன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட மேலும் ஆறு பேர் என்சிபியால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

டெல்லியை சேர்ந்த நிறுவனம்
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 16 ஆக உயர்ந்துள்ளது. நமஸ்க்ரே என்பது டெல்லியை அடிப்படையாக கொண்ட நிறுவனம், கனெப்ளஸ் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

நண்பர்களுடன் ஆர்யன் கான்
கோர்டெலியா குரூஸின் எம்ரஸ் கப்பலில் ஈவன்ட்டுகளை நிர்வகிக்கும் பொறுப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சனிக்கிழமையன்று, என்சிபி கோர்டெலியா கப்பலில் அதிரடி சோதனை நடத்தியது. இதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மற்றும் அவரது நண்பர் அர்பாஸ் மெர்சான்ட் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











