'இறுதிச் சுற்று மலர் டீச்சரை மறந்துட்டு கொஞ்சம் மதி கெட்டுத் திரியலாம் வாங்க!

By Shankar

-முத்துராமலிங்கன்

ரித்திகா மோகன் சிங். 'இறுதிச் சுற்று படம் பார்த்த பிறகு, இப்பிரபஞ்சத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரே பெயர் இதுதான் என்று ஆகிப்போனது. கிட்டத்தட்ட ரித்திகாவின் பக்தன் போல் ஆகிவிட்டேன். கிட்டத்தட்ட என்ற சொல்லை முந்தைய வாக்கியத்தில் பயன்படுத்தியதற்காக என்னை நானே கண்டிக்கிறேன். குணாவில் கமல் அபிராமி அபிராமி என்று அரற்றுவாரே அதையும் தாண்டிப் புனிதமாக நான் ரித்திகா ரித்திகா என்று அனத்திக்கொண்டு பைத்தியக்காரன் சாலை வழியாக அலைகிறேன்.

இதைப் படிக்கிறபோது பயபுள்ள சீக்கிரமே மெண்டல் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகப்போகுது என்று உங்களுக்குத் தோணலாம். உங்கள் சந்தேகத்தை எந்த வகையிலும் குறை சொல்லமுடியாது. அப்படி நடக்கக் கூடிய வாய்ப்பிருப்பதாகவே எனக்கும் தோன்றுகிறது.

ரித்திகாயணம் ....ரித்திகாயணம்... நிலைமை முற்றி இறுதிச் சுற்றுக்கு செல்லுமுன் என் மனசைக் கொஞ்சம் கொட்டித் தீர்த்துவிடுகிறேன்.

பிரசாத் லேப்பில் நேற்று, வெள்ளியன்றுதான் இப்படத்தைப் பார்த்தேன். இயக்குநர் சுதா கொங்கராவின் முந்தைய துரோகி படம் தந்த துயர அனுபவத்தால் இறுதிச் சுற்று பற்றி எனக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. குத்துமதிப்பாக ஒரு குத்துச் சண்டைப் படம் பார்க்கப் போகிறோம் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. போக, இந்திய சினிமாவில் பெண் இயக்குநர்கள் சொல்லிக் கொள்ளும்படி படங்கள் தந்ததில்லை. அபர்ணா சென், மீரா நாயர் போன்ற மிகச் சிலரே உருப்படியான படங்களைத் தந்திருக்கிறார்கள் என்பதால் சுதா கொங்கராவை நான் பொருட்படுத்தியிருக்கவில்லை.

Cinemakkaran Saalai- 30 Iruthi Sutru

முதலில் மன்னியுங்கள் சுதா. அப்புறம் ஒரு ராயல் சல்யூட் சுதா. சல்யூட் எவ்வித கமர்சியல் சமரசமும் செய்துகொள்ளாமல் இந்திய விளையாட்டுத் துறையின் சாக்கடை அரசியல் குறித்து ஒரு அபாரமான படம் தந்ததற்காக.

மன்னிப்பு. இரு விஷயங்களுக்காக. முதலாவது... தவறான முன் அபிப்ராயத்துடன் தியேட்டருக்குள் வந்ததற்காக. இரண்டாவது இக்கட்டுரையில் டார்லிங் ரித்திகாவுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதிய சல்லித்தனத்துக்காக.

Cinemakkaran Saalai- 30 Iruthi Sutru

உலக அரங்கில் விளையாட்டுத் துறையில் இந்தியா சோபிக்க முடியாததன் காரணம் அனைவருக்கும் தெரியும். இந்திய தேசத்தின் அத்தனை தெருக்களிலுமே தேர்ந்த விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். அரசியல் சூழ்ச்சிகளால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு, பெரிய இடத்துப்பிள்ளைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் சோபிக்கமுடியாமல் கோட்டைவிடுகிறார்கள் என்பது சொல்லிச் சொல்லி அலுத்துப்போன ஒன்று.

'இறுதிச் சுற்று பேசுகிற கதைக்களம் இதுதான். சூழ்ச்சிகளால் பழிவாங்கப்பட்டு பதக்கம் வெல்லமுடியாத தரமான விளையாட்டுக்காரனான மாதவன், ஒரு மீனவக் குப்பத்தில் உள்ள அன்றாடங்காய்ச்சிப் பெண்ணை உலக சாம்பியன் ஆக்கும் பரபர பரவசம் இப்படம். இன்னும் சுருங்கச் சொன்னால் ஒரு மீன்காரி உலகம் வியக்கும் குத்துச் சண்டைக்காரி ஆன கதை.

Cinemakkaran Saalai- 30 Iruthi Sutru

அந்த மீன்காரிதான் என் மனசை அரிந்த ரித்திகா மோகன சிங்காரி. மும்பையில் வசிக்கும் பஞ்சாப் பெண் சிங்கம். தந்தையின் வழிகாட்டுதலில் உண்மையில் பாக்ஸிங் கற்று 2009 ஆசிய விளையாட்டில் பங்கேற்றவர்.

'இறுதிச்சுற்று முழுக்க முழுக்க பாக்ஸிங் பற்றிய கதை என்பதால் ஒரிஜினலாக பாக்ஸிங் தெரிந்தவர் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தேடிக் கண்டெடுக்கப்பட்ட தங்கம்.

சீமான் இயக்கியிருந்த தம்பி படம் தவிர்த்து மாதவனை எனக்கு ஆகவே ஆகாது. ஆனால் இறுதிச் சுற்று மாதவனுக்கு ஒரு மணிமகுடம். மாதவனும் நன்றாக நடித்திருந்தார் என்றாலும் இப்படம் செய்த மா தவம் ரித்திகாதான் என்பேன்.

Cinemakkaran Saalai- 30 Iruthi Sutru

'டே கிழட்டுப் பயலே...' என்று மாதவனை அவமதிப்பதில் துவங்கி, மெல்ல அவர் மேல் காதல் வயப்படுவது வழியாக கிளைமேக்ஸில் தவித்து ஓடித் தாவி மாதவனின் இடுப்பில் லேண்ட் ஆவது வரை....கிளாஸிக் என்பார்களே... இனி அந்த வார்த்தையை டிக்‌ஷனரியில் இருந்து நீக்கிவிட்டு 'ரித்திகா சிங் என்று வைத்துவிடலாம். முதல் படத்தில் இவ்வளவு அபாரமாக 'மதியாகவே வாழ்ந்ததைச் சொல்ல சத்தியமாய் என்னிடம் வார்த்தைகள் இல்லை.

பிரேமம் பார்த்துவிட்டு பிரமை பிடித்தது போல் மலர் டீச்சர், மலர் டீச்சர் என்று அலைகிறீர்களே ஒரு கூட்டம். நீங்க எல்லாரும் மலர் டீச்சரை மறந்துட்டு கொஞ்சம் மதி கெட்டுத் திரியலாம் வாங்கன்னு அழைக்கிறதாத்தான் இருந்தேன். ஆனா வேண்டாம். தேவையில்லாமல் மலர் டீச்சரோடு என் மதியை ஒப்பிடுவதாக ஆகிவிடும். அவர்களெல்லாம் தயவு செய்து என் ரித்திகா பக்கம் வராதீர்கள். சாய் பல்லவி மலர் டீச்சராக நன்றாக நடித்திருந்தார். அவ்வளவே அவ்வளவுதான். ஆனால் என் ரித்திகா கதையில் வரும் மதியாகவே வாழ்ந்திருக்கிறார். நடுவில் நடிகை என்கிற ஒருத்தி இல்லவே இல்லை.

Cinemakkaran Saalai- 30 Iruthi Sutru

இந்த இடத்தில் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் எந்த அளவுக்கு பைத்தியக்காரனோ அந்த அளவுக்கு கோபக்காரன். கோபம் வந்தால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. 2016 தேசிய விருதுக் கமிட்டிக்காரர்கள் இந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரித்திகாவுக்கு கொடுத்து விடுங்கள். தவறினால் உங்கள் ஒவ்வொருவர் வீட்டின் முன்பாக நான் கொஞ்சம் கொஞ்சமாக தீக்குளிப்பேன் என்று இப்போதே எச்சரிக்கிறேன்.

இப்போதெல்லாம் பத்திரிகையாளர் காட்சிக்கு படம் சம்பந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் வருவதில்லை. ஆச்சரியமாய் இறுதிச் சுற்று ஷோவுக்கு ரித்திகா உட்பட மொத்தக் குழுவுமாய் வந்திருந்தார்கள்.

Cinemakkaran Saalai- 30 Iruthi Sutru

இடைவேளை விடும்போதே சும்மா ஒரு ஹாய் சொல்லிவிட்டு வரலாமா என்று யோசித்து, அதை மறு பரிசீலனை செய்து, படம் முடிந்ததும் தான், ரித்தியை சந்தித்து கைகொடுத்தேன். 'உங்கள் முன் திடீரென பரம ஏழை ஆகிவிட்டேன். என்னிடம் பாராட்ட வார்த்தைகள் ஏதும் இல்லை' என்றேன். மெல்லச்சிரித்தார். 'எனக்கும் சரியாக மாதவன் வயதுதான் என்றேன். இன்னும் கொஞ்சம் சிரித்தார். மிகவும் வற்புறுத்தி அவர் கையால் என் நெஞ்சில் ஒரு பஞ்ச் வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டேன்.

Cinemakkaran Saalai- 30 Iruthi Sutru

ஏனோ அபிராமியிடம் லட்டு வாங்க 'பார்த்த விழி பார்த்தபடி கமல் கியூவில் காத்திருந்த காட்சி ஒரு கணம் வந்துபோனது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X