twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூப்பர் ஸ்டார் ரஜினி முழுமையாக குணமடைந்ததும் ராணா படத்தை எடுத்தால் என்ன?

    By Sudha
    |

    Rajinikanth
    சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எப்போதுமே நெருக்கடிதான். அது சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும். அவரை எப்போது ஏதாவது ஒரு பக்கத்தில் நெருக்கிக் கொண்டேதான் இருக்கின்றனர். அந்த வகையில் இப்போது ராணா விவகாரம் உருவாகியுள்ளது.

    ராணா வருவது எப்போது என்ற செய்திகள் எங்கு பார்த்தாலும் அலை பாய்ந்தபடி உள்ளது. படமே கைவிடப்பட்டு விட்டதாக திடீரென ஒரு செய்தியை இப்போது உலவ விட்டுள்ளனர். ஆனால் இதை படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும், படத்தை தயாரிக்கப் போகும் ஈராஸும் மறுத்துள்ளனர்.

    ரஜினிகாந்த் ஒரு சாதாரண சூப்பர் ஸ்டார் அல்ல என்பதை இன்னும் யாரும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. அவர் ஒரு தனி மனிதர் அல்ல, அவர் ஒரு அடி எடுத்து வைத்தால், தமிழ் திரையுலகம் நூறு அடி எடுத்து வைக்கும். அப்படி ஒரு சக்தி வாய்ந்த திரை நட்சத்திரம் ரஜினி. அப்படிப்பட்ட ரஜினியை, அவரது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் ஏன் இப்படி நெருக்குகிறார்கள் என்பதுதான் புரியவில்லை.

    மிகப் பெரிய அளவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடுமையான மருத்துவப் போராட்டம் மற்றும் ரசிகர்களின் பிரார்த்தனைப் போராட்டங்களின் காரணமாக மீண்டும் புதுப் பொலிவுடன் ரஜினி திரும்பி வந்துள்ளார். ஆனால் அவர் முழுமையாக குணமடைந்து, பழைய ரஜினியைப் போல மாறி நடிப்பதற்கு நிச்சயம் கால அவகாசம் பிடிக்கும். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அவர் குணமடைந்து விட்டாலும் கூட உடனடியாக அதிரடிப் படம் ஒன்றில், நடிக்க வைப்பது என்பது நிச்சயம் உடல் நலனைப் பாதிக்கவே செய்யும்.

    ஆனால் அவர் முழுமையாக குணமடைவதற்கு முன்பே ராணா படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இதனால் அவரது உண்மையான ரசிகர்கள் நிச்சயம் கவலைப்படவே செய்வார்கள். ராணா, ரஜினியின் கனவுப் படம் என்பதில் சந்தேகமில்லை. அதில் நடிக்க ரஜினி ஆர்வமாகவே இருக்கிறார். இப்போதே படப்பிடிப்பை ஆரம்பியுங்கள் என்று அவர் கூறி வருவதாகவே இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் கூறுகிறார். படம் கைவிடப்படவில்லை என்றே படத் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் கூறியுள்ளது.

    ஆனால் அவர் முழுமையாக குணமடைந்து, பழைய ரஜினியாக, புலிப் பாய்ச்சலுடன் மீண்டும் நடிக்கும் அளவுக்கு அவரது உடல் நலமடைந்துள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனவே ரிஸ்க் எடுத்து நடிக்க வைத்து மறுபடியும் அது அவரது உடல்நலனைப் பாதித்து விடக் கூடாது என்ற கவலை உண்மையான ரசிகர்களுக்கு உள்ளது.

    ரஜினியின் ராணா உருவாவது உறுதி, அதில் ரஜினியைப் புதுப் பொலிவுடன் ரசிகர்கள் காணப் போவது உறுதி. அதேசமயம், அவரது உடல் நலனைப் புறம் தள்ளி விட்டு அவரைப் படப்பிடிப்புக்குக் கூட்டிக் கொண்டு போய் மேலும் சிக்கலை ஏற்படுத்தி விடக் கூடாது என்று திரையுலகிலும் ரஜினியின் விசுவாசிகள், நண்பர்கள் கருதுகிறார்கள். ரஜினி நலமாக இருந்தால்தான் தமிழ் திரையுலகம் பல மடங்கு சுகமாக இருக்கும் என்பது திரையுலகினர் ஒவ்வொருவரின் கருத்துமாகும்.

    மேலும், ரஜினி எப்போது நடித்தாலும் அதை ரசிப்பதற்கும், பிரமாண்டமாக வரவேற்பதற்கும் ரசிகர்கள் ஒருபோதும் சளைத்ததில்லை. எனவே ராணா சற்று 'லேட்'டாக வந்தாலும் 'லேட்டஸ்டாக' வரட்டுமே என்றுதான் உண்மையான ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

    ராணாவை விட ரஜினியின் உடல்நிலைதான் மிகவும் முக்கியம் என்றும் உண்மையான ரசிகர்கள் கருதுகிறார்கள்.

    English summary
    Super Star Rajinikanth's Raana is not abandoned, says Director KS Ravikumar and producer Eros. Fans are worried over Raana and Rajinikanth's health. Despite Rajini has recovered completely he defintely needs complete rest for some more time. But the pressure through Raana has worried the filmdom and the fans a lot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X