மாணவர்களின் 'நாயகன்' கமல்!

பள்ளி இறுதித் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. தேர்வு எழுத அட்டை, பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், ஷார்ப்னர் என அடிப்படை எழுது பொருட்கள் கூட இல்லாமல் அவதிப்படும் குழந்தைகள் இன்னமும் ஆயிரக்கணக்கில், ஏன் லட்சக்கணக்கில் உள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் பல குழந்தைகளுக்கு புதுப் பேனா, புது தேர்வு அட்டைகளுடன் தேர்வுக்குச் செல்வது இன்னமும் கூட ஒரு கனவாகவே உள்ளது.
இந் நிலையில் இக் குழந்தைளின் கண்ணீர் துடைக்க கரம் கொடுத்துள்ளனர் கமல்ஹாசனின் ரசிகர்கள்.
30,000 பேருக்கு இந்த ஆண்டு புதிய எழுது பொருட்களை வழங்குவது என முடிவு செய்த கமல்ஹாசன், அதை தனது நற்பணி இயக்கத்தின் மூலம் வழங்கி குழந்தைகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.
இதற்கென ரூ.8 லட்சம் செலவில் தேர்வு எழுதத் தேவையான அனைத்து உபகரணங்களையும் வாங்க உத்தரவிட்டிருந்தார் கமல்.
நேற்று காலை 8 மணிக்கு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த 1,000 மாணவ மாணவியருக்கு தனது கையால் எழுதுபொருட்களை வழங்கி இந்த நற்பணியைத் துவங்கி வைத்தார் கமல்ஹாசன்.
இதற்கான ஏற்பாடுகளை கமல்ஹாசன் நற்பணி மன்ற செயலாளர் ரா.குணசீலன், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
நல்லாசிரியர் விருது பெற்ற ஸ்ரீதரன், டாக்டர் ரகுபதி, வடசென்னை சங்கர், தென்சென்னை ஜான், ராசிபுரம் மணி, தூத்துக்குடி சேகர், விழுப்புரம் சுந்தரபாண்டியன் மற்றும் பழனி இமாம் ஹாசன் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கெடுத்துக் கொண்டனர்.
மற்ற மாவட்டங்களில் உள்ள மாணவ மாணவியருக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட கமல் நற்பணி இயக்க நிர்வாகிகள் மூலம் இந்த உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











