கோடைக்கு மோர் கொடுத்த ரஜினி!

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில், ரஜினிகாந்துக்கு சொந்தமான பெரிய தோட்டம் உள்ளது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ரஜினி, இங்குதான் ஓய்வு எடுக்கிறார்.
எந்திரன் படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் முடிந்து, கேளம்பாக்கம் பண்ணை வீட்டில், ரஜினி ஓய்வு எடுத்து வருகிறார். அப்போது, தோட்டத்தில் கொளுத்தும் வெயிலில் தொழிலாளர்கள் வேலை செய்வதைக் கண்டார்.
இதையடுத்து, பகல் நேரத்தில் தொழிலாளர்களுக்கு மோர் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தன் தொழிலாளர்களுடன் நின்றுவிடாமல், தோட்டத்தின் அருகில் உள்ள சாலையில் செல்லும் பொது மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று விரும்பிய ரஜினி, அதற்காக பெரிய பந்தல் அமைத்து கோடைகாலம் முடியும் வரை தினசரி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தோட்டத்துக்கு வெளியே நேற்று பந்தல் அமைக்கப்பட்டது. பெரிய அண்டாவில் மோர் வைக்கப்பட்டிருந்தது. கேளம்பாக்கத்தில் இருந்து இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களுக்கு மோர் வழங்கப்பட்டது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ரஜினி, நேற்று காலை 10 மணிக்கு, அந்த வழியாக சென்ற பொது மக்களுக்கு தன் கையாலேயே மோர் வழங்கி மகிழந்துள்ளார். இதை கேள்விபட்டதும் அப்பகுதியில் மக்கள் கூட்டமாக திரண்டு வந்துவிட்டனராம்.
ஏற்கெனவே, ராகவேந்திரா கல்யாண மண்டபம் வளாகத்தையொட்டி பெரும் பந்தல் அமைத்து இலவச மோர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் கூட இதேபோல வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











