தமிழ் சினிமாவை விட்டுப் போகமாட்டேன்!- சூர்யா

பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் 'ரக்த சரித்ரா'. இதே படம் தமிழில் ரத்த சரித்திரம் என்ற பெயரில் ரிலீஸாகிறது.
சூர்யா நடிக்கும் முதல் இந்திப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்துக்காக நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இயக்குனர் ராம்கோபால் வர்மா மற்றும் நடிகர் சூர்யா கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ராம்கோபால் வர்மா பேசுகையில், "எனது படங்களில் எப்போதுமே கதைதான் நாயகன். மேலும் கடந்த 20 ஆண்டுகளில் வெளியுலகிற்கு தெரியாத பல உண்மை சம்பவங்களை திரையில் கொண்டு வந்திருக்கிறேன். அந்த வகையில் ஆந்திராவில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை ரக்த சரித்திரா எனும் பெயரில் எடுத்திருக்கிறேன்.
உறைய வைக்கும் உண்மைக் கதையாக இது இருக்கும். இந்த கதையில் தொடர்புடைய சூரி என்பவரை சிறையில் சந்தித்து அவரது உணர்வுகளை பதிவு செய்துள்ளோம். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது..." என்றார்.
பின்னர் படத்தின் நாயகன் சூர்யா பேசினார். அவர் கூறியதாவது:
எனது மனைவி ஜோதிகா மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்னர் ராம் கோபால் வர்மாவின் அறிமுகம் கிடைத்தது. அவரது படத்தில் நடிக்க வேண்டுமென்ற விருப்பம் இப்போதுதான் நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்துள்ளேன்.
இந்தியில் நடித்தாலும் தமிழ் படங்களுக்கே முக்கியத்துவம் அளிப்பேன். தமிழ்தான் எனக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது. நல்ல கதை மற்றும் நேரம் அமைந்தால் இந்தி படங்களில் நடிப்பே தவிர ஒரு போதும் தமிழ் படவுலகை விட்டு செல்ல மாட்டேன்..." என்றார்.


Click it and Unblock the Notifications











