ராக்கெட் ராஜா என்ற பெயருக்கு எதிர்ப்பு-கார்த்தி வீடு முன்பு நாடார்கள் மறியல்
சிறுத்தை படத்தில் ராக்கெட் ராஜா என்ற பெயரைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கார்த்தி வீடு முன்பு, நாடார் மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நடிகர் கார்த்தி நடித்துள்ள படம் சிறுத்தை. இப்படத்தில் ராக்கெட் ராஜா என்ற பெயரில் அவர் நடித்துள்ளாராம். நாடார் மக்கள் கட்சி என்ற கட்சியின் தலைவர் பெயர் ராக்கெட் ராஜா. இதையடுத்து சிறுத்தை படத்தில் ராக்கெட் ராஜா என்ற பெயரைப் பயன்படுத்தியதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்பெயரை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும், இதை வலியுறுத்தி கார்த்தி வீட்டை முற்றுகையிடப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.
இதையடுத்து பாண்டி பஜாரில் உள்ள நடிகர் சிவக்குமார் வீட்டில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும் இன்று காலை தடையை மீறி நாடார் மக்கள் கட்சியினர் குவிந்து விட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெயரை மாற்ற மாட்டோம்-சிறுத்தை தயாரிப்பாளர்
இதற்கிடையே ராக்கெட் ராஜாஎன்ற பெயரை மாற்ற முடியாது என்று சிறுத்தை படத் தயாரிப்பாளரும், நடிகர் கார்த்தியின் உறவினருமான ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், படம் வெளிவருவதற்கு முன்பே அந்த கேரக்டர் பெயரை மாற்றக்கோருவது சரியல்ல. படம் பார்க்கும் போது உண்மை நிலை தெரியவரும். அப்போது எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











