அம்புலி படத்துக்கு டப்பிங் பேச மறுத்தேனா? - பார்த்திபன் விளக்கம்

பார்த்திபன் இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ஆனால் சில காட்சிகளில் தனது அனுமதி இல்லாமல், தன்னைப் போன்ற ஒருவரை டூப்பாகப் போட்டு சில காட்சிகளை அம்புலி இயக்குநர் எடுத்திருப்பதால் கோபப்பட்டு, டப்பிங் பேச மறுத்துவிட்டதாக செய்தி வெளியானது.
ஆனால் இதனை பார்த்திபன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், "எனக்கும் அம்புலி பட இயக்குனர்கள் ஹரிசங்கர், ஹரீஸ் நாராயண் ஆகியோருக்கும் இடையே டப்பிங் பேசும் விவகாரத்தில் எந்த தகராறும் இல்லை. நான் இதுவரை அம்புலி படத்தையே பார்க்கவில்லை.
இப்போதைக்கு நான் நடித்த வித்தகன் பட ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருக்கிறேன்.
இந்தப் படம் வெளியான பிறகு அம்புலி படத்தை ரீலீஸ் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளேன். அம்புலி பட டப்பிங் வேலையை இன்னும் நான் ஆரம்பிக்கவேவில்லை", என்றார்.
படத்தின் இயக்குனர்களில் ஒருவரான ஹரிசங்கர் கூறுகையில், "ஒரு சண்டை காட்சியில் மட்டும் பார்த்திபனுக்கு டூப் பயன் படுத்தியது உண்மைதான். ஆனால் அதில் எந்த பிரச்சினையும் எழவில்லை. பார்த்திபனுக்கு சம்பள பாக்கி எதுவும் இல்லை. கொடுக்க வேண்டிய முழு சம்பளத்தையும் ஏற்கனவே கொடுத்துவிட்டோம். படத்தை அவருக்கு ஓரிரு நாட்களில் திரையிட்டு காட்ட ஏற்பாடு செய்து வருகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications











