சிம்புவின் சுய தடை!

அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கடந்த ஆண்டு பெரும் சலசலப்பை ஏற்படுத்தினார் சிம்பு. முதலில் நயனதாரா விவகாரம் வெடித்தது. பின்னர் அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் அவரை சுற்றிச் சூழ்ந்தன.
இந்த நிலையில் கொஞ்ச காலத்திற்கு எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம் சிம்பு.
நேற்று சத்யம் தியேட்டர் வளாகத்தில் நடந்த சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி ஜூனியர் நடிக்கும் சிங்கக்குட்டி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது இவ்வாறு தெரிவித்தார் சிம்பு.
சிம்பு கூறுகையில், கடந்த ஆண்டு பல்வேறு காரணங்களுக்காக நான் பலமுறை செய்திகளில் அடிபட்டு விட்டேன். குறிப்பாக விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி எனக்கு பெரிய விளம்பரத்தைத் தேடிக் கொடுத்தது.
இந்த ஆண்டு திரைக்குப் பின்னால் பெரும்பாலான நாட்களைக் கழிக்க தீர்மானித்துள்ளேன்.
திரைப்பட விழாக்கள் உள்ளிட்ட எந்த விழாவிலும் நான் பங்கேற்கப் போவதில்லை.
கலை நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், ஆடியோ வெளியீட்டு விழா, டிவி நிகழ்ச்சிகள் என எதிலும் பங்கேற்கப் போவதில்லை. திரைப்பட வெளியீட்டிலும் கூட நான் கலந்து கொள்ள மாட்டேன்.
இப்போது எனக்கு மன அமைதி தேவை. எனது படங்களில் கூடுதல் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளேன். எனது திறமைகள்தான் இனிமேல் பேசப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளேன் என்றார் சிம்பு.
சிம்பு தற்போது சரவணன் இயக்கத்தில் சிலம்பாட்டத்தில் நடித்து வருகிறார். அடுத்து கெட்டவன் படத்தின் ஷூட்டிங்கைத் தொடரவுள்ளார்.
இதை விட முக்கியமாக இன்னொரு விஷயத்தையும் சிம்பு சொன்னார். அதாவது இனிமேல் தன்னை சிம்பு என்று அழைக்க வேண்டாம், சிலம்பரசன் என்றே அழையுங்கள் என்பதுதான் அது.


Click it and Unblock the Notifications











