லாரன்சுக்கு சமூக சேவகர் விருது... முதல்வர் வழங்குகிறார்!

வருகிற சனிக்கிழமை சுதந்திர தின விழா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு, பல்வேறு சாதனையாளர்களுக்கான விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.
கல்பனா சாவ்லா சாதனை விருதை ராஜமகேஸ்வரி, புஷ்பாஞ்சலி, ராஜலெட்சுமி ஆகியோர் பெறுகிறார்கள். சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கான விருது காஞ்சீபுரம் மனோகரன், கே.கே.நகர் ஜெயக்குமார், திருச்சி பாண்டி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த சமூக சேவை செய்தவர்களுக்கான விருதை நடிகர் லாரன்சுக்கு முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.
திருவான்மியூர் பிரசாத், நெல்லை சங்கர் ராமன், பழவந்தாங்கல் சேதுகுமாரி ஆகியோரும் சிறந்த நிறுவனம் மற்றும் சமூக சேவைக்கான விருதுகளை பெறுகிறார்கள்.
விருது ஏன்?
கடந்த 3 வருடங்களாக ஆதரவற்றோருக்கும் ஊனமுற்றோருக்கும் அறக்கட்டளை துவங்கி உதவிகள் செய்து வருகிறார் லாரன்ஸ். அசோக்நகரில் உள்ள தனது வீட்டில் 60 ஆதரவற்ற குழந்தைகளை தங்க வைத்து அவர்களது படிப்புச் செலவுகள் அனைத்தையும் கவனித்து வருகிறார்.
ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் குழந்தைகளின் உணவுச் செலவினைக் கவனித்துக் கொள்கிறார்கள். இது தவிர ஏழைக் குழந்தைகளுக்கான மருத்துவ செலவுகளையும் அவர் கவனித்துக் கொள்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னைப் போன்றவர்களுக்கு இந்த விருது பெரும் உற்சாகம் தருகிறது.
இப்போது சாலிகிராமத்தில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மாத வாடகைக்கு வீடு எடுத்து 30 ஆதரவற்ற குழந்தைகளை தங்க வைத்துள்ளேன்.
ஊனமுற்றோருக்கு நடனப் பயிற்சி அளித்து நடன குழு ஒன்றையும் துவக்கியுள்ளேன். அவர்களை வைத்து நடத்துகிற நடன நிகழ்ச்சி மூலம் வரும் தொகையில் 12 பேர் பெயர்களில் தலா ரூ.25 ஆயிரத்தை வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக போட்டுள்ளேன். இன்னும் நிறைய செய்யத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.


Click it and Unblock the Notifications











