சுயேச்சையாகப் போட்டி: மன்சூரலிகான் அறிவிப்பு

தேர்தல் நேரத்தில் எதையாவது பரபரப்பாக செய்வது மன்சூரலிகான் வழக்கம். இந்த முறையும் தேர்தலில் நிற்கக் கிளம்பியுள்ளார். இது குறித்து இன்று அவர் கூறியதாவது:
இன்றைக்குள்ள அரசியல் கட்சிகள் எதுவுமே சரியில்லை. எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது எவ்வளவு தொகுதிகள் ஒதுக்குவது என்பதில்தான் கவனம் செலுத்துகின்றன. எல்லாருமே வாக்காளர்களை மறந்து விட்டன. தேர்தல் முடிந்ததும் உறவை தேனிலவு முடிந்தது என்று சொல்லி உறவை முறித்துவிடுவர்.
இது போன்ற செயல்களைப் பார்த்து வெறுத்துப் போய்விட்டது எனக்கு. எனவே எந்த கட்சியிலும் சேராமல் தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளேன். எந்த தொகுதியில் நிற்பேன் என்பதை ஓரிரு தினங்களில் அறிவிப்பேன். ஏற்கனவே 1999 பாராளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு 88 ஆயிரத்து 546 வாக்குகள் வாங்கியவன் நான்.
காலில் விழுந்தாவது....
அதன் பிறகு திருச்சி பாராளுமன்ற தேர்தலிலும் நின்றேன். முக்கிய ஆளும் கட்சி அங்கு தோற்பதற்கு நான்தான் காரணம் என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த முறை நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். நான் சட்டமன்றத்துக்கு சென்றால் ஆளும் கட்சியின் கால்களில் விழுந்தாவது தொகுதி மக்களின் குறைகளைத் தீர்க்க பாடுபடுவேன்.
புளி வியாபாரம், வத்தல் வியாபாரம் செய்பவர்களின் பணத்தையெல்லாம் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையாகவே பணத்தை கடத்துபவர்கள் இவர்களிடம் மாட்டுவதில்லை.
தமிழகத்தில் தமிழர் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன. வெளி மாநிலத்தவர்தான் இங்கு ஆதிக்கம் செய்கின்றனர். தேர்தலுக்கு பிறகு தமிழர்களுக்கு உதவுவதற்காக 'தமிழ் பேரரசு' என்ற அமைப்பைத் துவங்க இருக்கிறேன், என்றார்.


Click it and Unblock the Notifications











