சிம்பு-தனுஷ் கூட்டணி?

போக்கிரி படம் மூலம் தமிழில் இயக்குநரானவர் பிரபுதேவா. அதில் விஜய்யை வைத்து அவர் காட்டிய வித்தைக்கு செமத்தியான வரவேற்பு கிடைத்ததால் மறுபடியும் விஜய்யுடன் இணைகிறார்.
இப்படத்தை முடித்து விட்டு புதிய படம் ஒன்றை தமிழில் இயக்கவுள்ளார் பிரபு தேவா. இப்படத்தில்தான் சிம்புவும், தனுஷும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக சிம்பு, தனுஷின் சம்மதத்தையும் பிரபுதேவா பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிம்புவிடம் கேட்டபோது, உண்மைதான். இதுதொடர்பாக பிரபுதேவா பேசியுள்ளார். தனுஷுடன் நடிக்க நான் தயாராகவே இருக்கிறேன். இருவரது திறமைகளுக்கும் பொருத்தமான கதையாக இருந்தால் நிச்சயம் தனுஷுடன் சேர்ந்து நடிப்பேன்.
தனுஷின் நடிப்புத் திறமை எனக்கு நன்றாகவே தெரியும். அவர் மீது எனக்கு நிறைய மரியாதை உள்ளது. பிரபுதேவா அருமையான, திறமையான இயக்குநர். மூன்று பேரும் இணைந்தால் நிச்சயம் அது மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும். அதில் சந்தேகமே இல்லை என்றார் சிம்பு.
ஆனால் இந்தத் தகவலை தனுஷ் தரப்பு மறுத்துள்ளது. தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கூறுகையில், அப்படி எந்தப் படத்திலும் தனுஷ் ஒப்பந்தமாகவில்லை. இது நல்ல கற்பனை என்றார்.
தற்போது பிரபுதேவா, இந்தியில் சல்மான் கானை வைத்து 'வான்டட் டெட் ஆர் அலைவ்' (போக்கிரி படத்தின் ரீமேக் டைட்டில் இது) என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதை முடித்து விட்டு, ஐங்கரன் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள படத்தை இயக்கப் போகிறார்.
சிம்பு, தனுஷை வைத்து பிரபு தேவா படம் இயக்குவது உண்மையாக இருந்தால், நிச்சயம் அது திரை ரசிகர்களுக்கு செமத்தியான விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications











