மோகன்லாலின் 'நெருப்பு சாகஸம்'

அதிரடியாக சண்டைப் படங்களில் நடித்தாலும் கூட நடிகர் மோகன்லாலின் முகத்தில் உள்ள குழந்தைத்தனம் ரசிகர்களின் மனதை விட்டு அகலாது. சிரித்த முகத்துடன் நடிப்பில் அசத்திவந்த மோகன்லால் ரசிகர்களை நிஜத்தில் அதிரடிக்க முடிவு செய்துவிட்டார் போலும்.
கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் வரும் மே 1முதல் 4ம் தேதி வரை விஸ்வமயம் 2008 என்ற மேஜிக் நிபுணர்கள் மாநாடு நடக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 1000 நிபுணர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.
இதை முன்னிட்டு கேரள இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் வகையில் 'நெருப்பில் இருந்து தப்பிக்கும்' கண்கட்டு சாகஸத்தை செய்து காண்பிக்கப் போவதாக நடிகர் மோகன்லால் அறிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில், மன உறுதி இருந்தால் போதும், வாழ்க்கையில் எப்படிப்பட்ட சிக்கல்கள் வந்தாலும் சமாளித்துவிட முடியும் என்பதை நம் இளைஞர்களுக்கு உணர்த்துவதற்கான ஓர் எளிய முயற்சிதான் இது.
இந்த சாகஸ வித்தையை செய்வதற்காக கடந்த 18 மாதங்களாக பிரபல மேஜிக் நிபுணர் கோபிநாத் முத்துகாட்டிடம் கடும் பயிற்சியைப் பெற்றுள்ளேன் என்றார்.
திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் வரும் ஏப்ரல் 27ம் தேதி மோகன்லாலின் சாகஸ நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதுபற்றி திருவனந்தபுரத்தில் மேஜிக் அகாடமியை நடத்தி வருபவரும் மோகன்லாலுக்கு பயிற்சி அளித்தவருமான கோபிநாத் முத்துகாட் கூறுகையில், கடந்த 2005ல் எனது மேஜிக் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க நடிகர் மோகன்லாலை அணுகினேன். அப்போதுதான் மேஜிக் மீது அவருக்குள்ள ஆர்வத்தை தெரிந்து கொண்டேன்.
நெருப்பு சாகஸத்தை கற்றுக்கொண்டு செய்யவேண்டும் என்று அவர் கேட்டபோது எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் கடந்த 18 மாதங்களாக சிரத்தையாக அவர் மேற்கொண்ட பயிற்சியைப் பார்க்கும் போது ஏப்ரல் 27ம் தேதி நடக்கும் சாகஸ நிகழ்ச்சியில் அவர் நிச்சயம் எல்லோரையும் அசத்துவார் என்றார்.


Click it and Unblock the Notifications











