2015 ன் வசூல் + வெற்றி நாயகனாக மாறிய ஜெயம் ரவி
சென்னை: தனி ஒருவன் படத்தின் மூலம் 2015ன் வசூல் நாயகனாகவும், வெற்றி நாயகனாகவும் மாறியிருக்கிறார் தமிழில் இளம் கதாநாயகர்களில் ஒருவரான ஜெயம் ரவி.
கடந்த வருடம் வெளியான நிமிர்ந்து நில் படத்திற்குப் பின்னர் ஜெயம் ரவியின் திரை வாழ்க்கையில் லேசான தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து இந்த வருடத்தில் வெளியான ரோமியோ ஜூலியட் மற்றும் சகலகலாவல்லவன் போன்ற படங்கள் ஜெயம் ரவிக்கு வெற்றிப் படங்களாக மாறின.

ஆகஸ்ட் மாதம் ஜெயம் ரவி நடிப்பில் அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் திரைப்படம், ஜெயம் ரவியின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக தற்போது மாறியிருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான தனி ஒருவன் வசூலில் சக்கைப் போடு போட்டு சுமார் 75 கோடிகளை இதுவரை உலகம் முழுவதும் வசூலித்து இருக்கிறது.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பைப் பார்த்து படம் பார்க்காதவர்கள் கூட திரையரங்குகளுக்கு சென்று தனி ஒருவன் படத்தைப் பார்த்து வியந்தனர்.
அந்த அளவிற்கு திரைக்கதை, நடிப்பு எல்லாமே கச்சிதமாக அமைந்து தனி ஒருவனைத் தரணியில் ஒரு படமாக மாற்றியது. இந்தப் படத்தின் வெற்றி ஒரு சந்தோஷம் என்றால் மேலும் ஒரு சந்தோஷமாக இந்த ஆண்டின் வசூல் நாயகன் என்ற பட்டத்தையும் ஜெயம் ரவி கைப்பற்றியிருக்கிறார்.
இந்த வருடம் வெளியான படங்கள் அனைத்துமே தமிழ் சினிமாவிற்கு கைகொடுக்காத நிலையில், போட்ட பணத்தை விட 1 மடங்கு அதிகமாக வசூலித்துக் கொடுத்திருக்கிறது தனி ஒருவன் திரைப்படம்.
40 கோடிகளில் எடுக்கப்பட்ட இப்படம் 75 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து இருக்கிறது, மேலும் சாட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமை ஆகியவைகளை சேர்க்கும்போது லாபம் இன்னும் அதிகமாகவே கொடுத்திருக்கிறது.
படத்தை தயாரித்த மற்றும் வாங்கி வெளியிட்ட அனைவருக்கும் படம் லாபகரமாக அமைந்ததால் ஜெயம் ரவியின் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த பூலோகம் படத்தை தற்போது தூசு தட்டி வெளியிடும் முடிவில் பூலோகம் படக்குழுவினர் இருக்கின்றனர்.
அஜீத்தின் வேதாளம் மற்றும் கமலின் தூங்காவனம் போன்ற படங்கள் வெளியாகும்போது, இந்த வசூல் நாயகன் பட்டத்தை ஜெயம் ரவி நழுவ விடலாம்.
மொத்தத்தில் ஜெயம் ரவிக்கு இந்த ஆண்டு ஜெயமான ஆண்டாகவே அமைந்திருக்கிறது....


Click it and Unblock the Notifications











