தன் வீட்டுத் தோட்டத்தில் 23 அடி ஆஞ்சநேயரை பிரதிஷ்டை செய்யும் அர்ஜுன்!

இந்தச் சிலையை தனது சொந்த செலவில் 4 ஆண்டுகளாக சிற்பிகளை வைத்து செய்து வந்தார் அர்ஜூன். உலகில் மிகப் பெரிய ஆஞ்சநேயர் சிலை இதுவே என்று கூறப்படுகிறது.
நடிகர் அர்ஜுன், மிகத் தீவிரமான ஆஞ்சநேய பக்தர். ஆஞ்சநேய ஸ்தோத்திரங்களை தினமும் மனப்பாடமாக சொன்ன பிறகே, படப்பிடிப்புக்கு புறப்படுவார். சென்னை கிருகம்பாக்கத்தில் உள்ள தனது தோட்டத்தில் ஆஞ்சநேயருக்கு கோவில் கட்ட முடிவு செய்தார்.
ஒரே கல்லில் 23 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைய வேண்டும் என்ற அவரது விருப்பத்தின் பேரில் இந்த சிலை செய்யப்பட்டது. ஒரு வருடமாக இந்த சிலைக்கான கல்லைத் தேடி, பெங்களூர் அருகே கொய்ரா எனும் இடத்தில் கண்டுபிடித்தார்.
இந்தக் கல்லில் ஆஞ்சநேயர் உட்கார்ந்த நிலையில் காட்சி தருவது போன்ற அந்த சிலையை செய்து முடிக்க, 4 வருடங்களாயின. 23 அடி உயரத்தில், 17 அடி அகலத்தில், 9 அடி அடர்த்தியில், 150 டன் எடை கொண்ட ஆஞ்சநேயர் சிலை இப்போது முழுவதுமாக தயாராகியுள்ளது.
தனது சொந்த கோவிலாக இல்லாமல், பொதுமக்கள் வழிபடும் வகையில், ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் கோவில் கட்ட அவர் தீர்மானித்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய (உட்கார்ந்த நிலையில் உள்ள) ஆஞ்சநேயர் சிலை இதுவே. பெங்களூர் அருகில் உள்ள கொய்ரா கிராமத்தில் இருந்து அவர் இன்னும் 2 நாட்களில் விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு சிலை சென்னை கொண்டு வரப்படுகிறது.
இதற்கென 160 டயர்களை கொண்ட சிறப்பு டிரக் வரவழைக்கப்பட்டுள்ளது. இதில் சிலையை ஏற்றவே இரு தினங்களாவது பிடிக்கும் என்கிறார்கள்.
இன்னும் இரு வாரங்களில் இந்த சிலை அர்ஜுன் வீட்டுத் தோட்டத்தில் கம்பீரமாக நிற்கும்.
இதுகுறித்து அர்ஜுன் கூறுகையில், "இவ்வளவு பெரிய ஆஞ்சநேயர் சிலை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்து இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன்.
அந்த சிலையை என் தோட்டத்தில் பிரதிஷ்டை செய்தபின், கோவில் கட்டும் பணி தொடங்கும். கோவில் கட்டி முடித்த பிறகு, முறைப்படி கும்பாபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடைபெறும். பொதுமக்கள் வழிபடும் வகையில், கோவில் திறந்துவிடப்படும்..." என்றார்.


Click it and Unblock the Notifications











