'தம்'மை விட்ட சிம்பு!

பாபா படத்தின் ரிலீஸின்போது அப்படத்தில் ரஜினி புகை பிடிப்பது போன்ற காட்சிகளை பாமக பெரும் பிரச்சினையாக்கியது. மேலும் அப்படத்திற்கு எதிராகவும் கோபப் பார்வையைக் காட்டியது.
இதையடுத்து திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதில்லை என்ற முடிவை ரஜினி எடுத்தார்.
அதன்படி பாபாவுக்குப் பிறகு வந்த சந்திரமுகியிலும், லேட்டஸ்டாக வந்த சிவாஜியிலும் அவர் புகை பிடிப்பது போன்ற காட்சியில் நடிக்கவில்லை. மாறாக சாக்லெட்டை தூக்கிப் போட்டு பிடிப்பது, நாணயத்தை தூக்கிப் போட்டு பிடிப்பது போன்று புது ஸ்டைலை உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், நடிகர் விஜய் படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற விஜய், இனிமேல் அப்படி நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார். அதற்கு அன்புமணி பாராட்டு தெரிவித்தார்.
தற்போது இந்த வரிசையில், சிம்புவும் இணைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், இனிமேல் திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன். எனது ரசிகர்களுக்கு மோசமான முன்னுதாரணமாக இருக்க நான் விரும்பவில்லை என்றார் சிம்பு.
காளை படத்தில் இடம்பெறும் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் குறித்து கேட்டபோது, இப்படம் நீண்ட காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டு விட்டது. இனிமேல் அதுபோன்ற காட்சிகள் இடம் பெறாது என்றார்.
காளை படம் சரியாக போகாததை ஒப்புக் கொண்ட சிம்பு, இனிமேல் கதையைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனத்துடன் இருக்கப் போவதாக தெரிவித்தார்.
காளை படத்துக்கு எதிராக வழக்கு:
இந் நிலையில் கோடம்பாக்கத்தை சேர்ந்த சைமன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,
காளை படத்தில் நாயகனாக சிம்பு நடித்துள்ளார். இதில் அவரது அத்தை கதாபாத்திரத்தில் நடிகை சங்கீதா நடித்துள்ளார். அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள உறவு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஆடிப்பாடியுள்ள ஒரு பாடல் காட்சி மிகவும் ஆபாசமாக உள்ளது. இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களும் இடம் பெற்றுள்ளன.
அத்தை என்ற உறவையே கொச்சைப்படுத்தியுள்ளனர். கலாச்சாரத்தை சீரழிக்கும் இதுபோன்ற காட்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. ஆனால் இந்த காட்சிக்கு சென்சார் போர்டு அனுமதி வழங்கியது தவறு. இதனால் அந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும். அதுவரை இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











