அரசியலில் குதித்தால், சினிமாவுக்கு முழுக்கு! - அஜீத்தின் அதிரடி

கடந்த சில மாதங்களாகவே தனது அரசியல் பிரவேசம் குறித்து பகிரங்கமாக பேசி வருகிறார். குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசிய பிறகு, அரசியலில் குதிக்கும் முடிவில் அவர் உறுதியாக உள்ளார் என்கிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தான் புதிய கட்சி தொடங்கப் போவதில்லை என்றும், ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து சாதாரண தொண்டனாக பணியாற்றப் போவதாகவும், தனது செயல்திறன் பார்த்து பதவி கொடுத்தால் போதும் என்றும் கூறியிருந்தார்.
அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
"எனக்கு இன்று அரசியல் ஆசை இல்லா விட்டாலும், நாளைக்கே சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை அரசியலுக்குள் கட்டாயமாக இழுத்து விட்டால், அரசியலையும், சினிமாவையும் ஒன்றோடு ஒன்று கலக்க மாட்டேன். சினிமாவில் நடிக்கவே மாட்டேன்.
காரணம், சினிமாவில் நடித்துக் கொண்டே கார் ரேஸிங்கில் கலந்து கொண்டதால் என்னால் அந்த இரண்டு துறைகளிலும் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை. இது என் சொந்த வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம். நீங்கள் சொல்கிற சூழ்நிலை வந்தால்... எனக்குப் பிடித்த கட்சியில் சேருவேன். என்னுடைய நற்பணி இயக்கங்களில் எல்லா கட்சியை சேர்ந்த ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் நான் ஒருபோதும் பிரிவினை ஏற்படுமாறு செயல்பட மாட்டேன். அவர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே என்னோடு வரலாம்.
அடுத்தது நான் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டுமென்றால், நான் சேர்கிற கட்சியில் எனக்கென ஏதாவது ஒரு முக்கிய பதவியை கொடுக்க முன்வந்தால், அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். எனக்கு முன்பே அந்த கட்சிக்காக இருபது வருடங்கள் உழைத்தவர்கள் மனதைப் புண்படுத்துகிற மாதிரியான முன்னுரிமை எனக்கு அளிக்கப்படுவதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு ஏதாவது ஒரு பணி கொடுத்து, அதை நான் எப்படி செய்து முடித்து காட்டுகிறேன் என்பதைப் பொறுத்தே பதவியோ, உயர்வோ எனக்கு அளிக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன்", என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











