சினிமா போதும், இனி முதல்வர் பதவிதான்! - சிரஞ்சீவி

ரஜினி நடித்த ராணுவ வீரனில் அறிமுகமானவர் சிரஞ்சீவி. கடந்த 30 ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவின் முதல்நிலை நடிகராகத் திகழ்பவர் சிரஞ்சீவி. இதுவரை 149 படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவில் உச்சத்திலிருக்கும்போதே 2009-ல் அரசியலில் நுழைந்தார். பிரஜா ராஜ்யம் என்ற தனிக்கட்சியை அவர் தொடங்கினார். 2009-ல் நடந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அவரது கட்சி, ஆந்திரத்தில் 18 எம் எல் ஏக்களைப் பெற்றது. 17 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது.
ஆனால் சமீபத்தில் திடீரென பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரஸில் இணைப்பதாக அறிவித்தார் சிரஞ்சீவி. இப்போது இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் சினிமாவில் நடிப்பதாக அறிவித்தார்.
அவரது 150வது படத்தை தானே தயாரிக்கப் போவதாகவும், அதில் அப்பா சிரஞ்சீவி நடிப்பார் என்றும் அவரது மகனும் நடிகருமான ராம் சரண் தேஜா அறிவித்தார்.
புதிய படத்துக்கான இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது நடிப்புக்கு நிரந்தர முழுக்கு என அறிவித்துள்ளார் சிரஞ்சீவி.
இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசியலில் மிகவும் பிஸியாக உள்ளேன். மீண்டும் மேக்கப் போடுவதில் அர்த்தமும் இல்லை, அதற்கு நேரமும் இல்லை. என் இடத்தை என் மகன் ராம்சரண் நிரப்புவார்," என்றார்.
அடுத்த படத்தில் நீங்கள் அரசியல்வாதியாக, முதல்வராக நடிப்பதாக இருந்ததாக கூறப்பட்டதே என்று கேட்டதற்கு, "ஆந்திர மக்களுக்கு என்னை நிஜத்தில் இந்த மாநில முதல்வராகவே பார்க்க நீண்ட நாளாக ஆசை. இனி அதற்கான வேலைகளில் இறங்குவேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











