'சிறந்த குடிமகன்... குடிப்பழக்கமே இல்லாதவர்...!'- விஜயகாந்த் பற்றி மன்சூரலிகான்

நடிகர் மன்சூர்அலிகான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நடிகர் வடிவேலு அரசியல் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் நடிகர் விஜயகாந்தை தரக்குறைவாக பேசி வருகிறார். விஜயகாந்தின் குரல் எப்போதும் மெதுவாகத்தான் இருக்கும்.
அவர் மாதம் முழுவதும் வெளியில் அலைந்து மைக்கை பிடித்து பேசுவதால் அது போதையில் பேசுவது போல்தான் தெரியும். என்னுடைய குரலும் அப்படித்தான் இருக்கும்.
வீட்டின் முன் நிறுத்தியிருந்த காரால் ஏற்பட்ட பிரச்சினையை பேசி தீர்க்காமல் கோர்ட்டு வரை சென்று இப்போது அதனை வைத்து நடிகர் வடிவேல் அரசியல் மூலம் பழி வாங்குகிறார்.
வடிவேலுவிடம் 2 வருடத்திற்கு முன்பு இதுபற்றி பேசி இருக்கிறேன். நடிகர்கள் ஒரு தெருவில் வாழ்பவர்கள். அவர்கள் மற்றவர்களுக்கு பலியாகிவிடக் கூடாது. தேர்தல் இன்னும் 4 நாட்களில் முடிந்து விடும். அதன் பின்னர் நாம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கும் நிலை வரும்.
சிறந்த குடிமகன் விஜயகாந்த்...
அண்ணன் விஜயகாந்த் குடியரசு தலைவரால் சிறந்த குடிமகன் விருது வாங்கி உள்ளார்.
32 இயக்குனர்களை அறிமுகம் செய்து வைத்தவர். என்னை போன்ற பலரையும் அறிமுகம் செய்தவர். அவர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த காலம் பொற்காலம். கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டு கொண்டு வந்தவர். ஒரு கலைஞனை சக கலைஞனான வடிவேலு கீழ்தரமாக விமர்சித்து பேசுவது வேதனையானது.
அரசியலில் நடிகர்களை பயன்படுத்தி விட்டு துடைத்து போட்ட கல் போன்று தூக்கி எறிந்து விடுவார்கள்.
நடிகர் வடிவேலு காழ்ப்புணர்ச்சியைக் கைவிட வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக வடிவேலு ராமேசுவரத்தில் நடந்த கூட்டத்தில் உணர்ச்சிப் பூர்வமாகப் பேசினார். ஆனால் இப்போது நான் போட்டியிடும் ஆலந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்க உதவிய காங்கிரசை ஆதரித்து பேசுகிறார். அப்படியானால் ஈழத் தமிழர்களுக்காக வடிவேலு அன்று வடித்தது நீலிக் கண்ணீரா? நடிகர் விஜயகாந்தை 20 வருடங்களாக எனக்குத் தெரியும். 18 படங்களில் அவருடன் நடித்து உள்ளேன். அவர் மது அருந்துவதே இல்லை...", என்றார்.
விஜயகாந்தைப் பற்றி மன்சூரலிகான் - ஒரு ஃப்ளாஷ்பேக்
இதே மன்சூரலிகான் சில தினங்களுக்கு முன் விஜயகாந்தை விமர்சித்துப் பேட்டியளித்தார். அதில், விஜயகாந்த் முதல்வர் பதவிக்கு தகுதியில்லாதவர். கருணாநிதிதான் முதல்வராக வருவார் என்றெல்லாம் பேசினார்.
சில ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்துடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. அப்போது, விஜயகாந்தை இதே மன்சூரலிகான் குடிகாரன் என்றும், பெண்களை மோசம் செய்தவர் என்றும் விமர்சித்தார். தண்ணியப் போட்டா தள்ளாட்டத்துல இந்தக் கேப்டனுக்கு ஒண்ணுமே புரியாது, என அவர் அடித்த கமெண்ட் அவருக்கே மறந்துவிட்டது போலும். ஆனால் மக்கள் மறக்கவில்லையே!!


Click it and Unblock the Notifications











