'ஒன்வே'யில் வந்ததால் ரூ 100 அபராதம் செலுத்திய அமீர்கான்!

பாலிவுட்டின் முதல்நிலை நடிகரான அமீர்கான் தனது விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ சொகுசு காரில் மும்பை பஞ்ச்கானியில் இருந்து சதாராவுக்கு மனைவி கிரண் ராவுடன் சென்று கொண்டிருந்தார்.
சதராவில் உள்ள ஒரு சாலையில் ஒருவழிப்பாதை (நோ என்டரி) என்பதைக் கவனிக்காமல் அமீர்கான் காரை ஓட்டிச்சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் அமீர்கான் காரைத் தடுத்து நிறுத்தினார்.
போக்குவரத்து விதியை மீறியதாக அவருக்கு ரூ.100 அபராதம் விதித்தார். காரில் இருப்பது அமீர்கான் என்பது போலீஸ்காரருக்கு முதலில் தெரியவில்லை.
இதற்கிடையே அவரை அடையாளம் கண்டு ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடிவிட்டனர். அவர்கள் அமீர்கானுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று போலீசாரை கேட்டுக் கொண்டனர்.
ஆனால் அமீர்கான் , "அவர் தன் கடமையை மிகச் சரியாக செய்துள்ளார். அவரை எதுவும் சொல்லாதீர்கள். தவறு என்னுடையது," என்று கூறி தானே முன்வந்து ரூ.100 அபராதம் செலுத்தினார். மேலும் அவர் கூறுகையில், "தவறு யார் செய்தாலும் தன் அந்தஸ்தைக் காட்டி யாரும் தப்பிக்க முயலக்கூடாது. இதை மக்களும் புரிந்து கொண்டு, போலீசார் மீது ஆதிக்கம் செலுத்துவதை தவிர்க்கவேண்டும்," என்றார்.
அதற்கான ரசீதையும் பெற்றுக்கொண்டு தான் வந்த வழியிலேயே திரும்பிச் சென்று, வேறு பாதையில் தான் செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றார்.


Click it and Unblock the Notifications











