500, 1000 நோட்டு விஷயத்தில் கருத்து சொல்லவே பயமா இருக்கு! - ஆமிர் கான்
மும்பை: என்னைப் போன்ற பிரபலங்கள் ரூ 500, 1000 நோட்டு ஒழிப்பு விஷயத்தில் எந்தக் கருத்தையும் பேசவே பயமாக உள்ளது, என்று பிரபல நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார்.
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாஸன், விஜய் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.

அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட இந்தி திரையுலக பிரமுகர்கள் பலரும் வரவேற்று உள்ளனர். சிலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தி நடிகர் ஆமிர் கானிடம், ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், "என்னைப் போன்ற பிரபலங்கள் இந்த விஷயத்தில் (பண ஒழிப்பு) ஏதாவது பேசுவதற்கே பயமாக இருக்கிறது. நாங்கள் ஏதாவது சொன்னால் வேறொரு அர்த்தத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்.. அதை வைத்து மக்கள் வெறுப்பைக் கொட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்," என்றார்.
உங்களுக்கு எந்த வகையில் பண ஒழிப்பு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கேட்டபோது, "எனது பணம் முழுவதும் வங்கியில்தான் உள்ளது. சினிமாவில் எனது பணப் பரிவர்த்தனைகளை காசோலைகள் மூலமே செய்கிறேன். எனவே மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











