திருமணம் என்பது வெறும் பேப்பரில் கையெழுத்து போடுவது போலத்தான்.. புதிய காதலி குறித்து பேசிய அமீர்கான்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், பிரைம் வீடியோவில் கஜோல் மற்றும் டிவிங்கிள் தொகுத்து வழங்கும் "டூ மச்" என்ற அரட்டை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் தனது தனிப்பட்ட வாழ்க்கை, கடந்தகால உறவுகள் மற்றும் காதல், திருமணம் பற்றிய தனது கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்.
இந்த ஆண்டு தனது முக்கிய பிறந்தநாளின்போது தனது புதிய காதலியான கௌரி ஸ்பிராட்டை அறிமுகப்படுத்திய அமீர் கான், ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் உடனான தனது திருமணங்கள் குறித்தும், புதிய துணை கிடைத்த பிறகு மன வேதனையிலிருந்து எப்படி மீண்டார் என்பது குறித்தும் பேசினார்.

அமீர் கான் ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ்வுடனான பிரிவுகளை "கடுமையான அதிர்ச்சி" என்று விவரித்தார். மேலும், கௌரி ஸ்பிராட் மீது தான் "அதிக அர்ப்பணிப்புடன்" இருப்பதாகவும் குறிப்பிட்டார். "திருமணம் என்பது வெறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதுதான்" என்றும் அவர் தெரிவித்தது விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
இந்த உரையாடலின்போது, டிவிங்கிள் கண்ணா விளையாட்டாக, "நாங்கள் நீண்ட காலமாக திருமணம் செய்து கொண்டவர்கள், இப்போது உங்களைப் பார்த்து வாழ்கிறோம். நீங்கள் ஒரு புதிய வாழ்க்கை போன்று இருக்கிறீர்கள். 60 வயதிலும் உங்கள் வாழ்க்கையில் காதல் இருக்கிறது" என்று கூறினார்.
அதற்கு அமீர் கான் நேர்மையாக பதிலளித்தார்: "இதை இரண்டு வழிகளில் பார்க்கலாம். நீங்கள் அனைவரும் என்னைப் போன்று அத்தகைய அதிர்ச்சிகரமான பிரிவுகளை சந்தித்ததில்லை. நான் ரீனா மற்றும் கிரண் இருவருடனும் மிகவும் நெருக்கமாக இருந்தேன். 'இருந்தேன்' என்பது தவறான வார்த்தை - நான் இப்போதும் அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன்.
ஒருவருடன் 16 ஆண்டுகள் போன்ற நீண்ட காலம் இருக்கும்போது, ரீனாவும் நானும் ஒன்றாக வளர்ந்தோம். ஒரு உறவு சரியாக அமையாதபோது, அது ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது, அதிலிருந்து நீங்கள் மீள வேண்டும். நான் மீள்வதற்கு நான்கு ஆண்டுகள் ஆனது. அதை நீங்கள் அனைவரும் கடந்து வந்ததில்லை. எனவே, ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கை உண்டு.
நான் திருமணம் செய்து கொண்ட இரண்டு பெண்களும் அற்புதமானவர்கள் என்பதில் நான் அதிர்ஷ்டசாலி என்று உணர்கிறேன். நாங்கள் பிரிந்தாலும், நாங்கள் இன்னும் ஒரு குடும்பமாகவே இருக்கிறோம்" என்று அவர் விளக்கினார்.
டிவிங்கிள் அவரிடம் காதல் எளிதானதா, திருமணம் கடினமானதா என்று கேட்டார். அமீர்கான் சற்றே சிந்தித்து பதிலளித்தார்: "நீங்கள் ஒரு உறவுக்கு உறுதியுடன் இருக்கும்போது, திருமணம் என்பது வெறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதுதான். ஆனால், நீங்கள் அந்த நபருடன் உண்மையாக இணைந்திருந்தால், அது திருமணம் போன்றதுதான்.
கௌரியும் நானும், இன்று நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் ஒருவருக்கொருவர் மிகவும் உறுதியுடன் இருக்கிறோம்" என்றார்.
டிவிங்கிள் தனது சொந்த கருத்தைச் சேர்த்து, "காதல் குருட்டுத்தனம் என்பார்கள், ஆனால் திருமணம் ஒரு பூதக்கண்ணாடி போன்றது. அதை உயர்த்திப் பார்க்கும்போது, எல்லா குறைபாடுகளையும் பார்க்கிறீர்கள், சூரிய ஒளியால் அந்த நபரைக்கூட எரிக்கிறீர்கள்" என்று கிண்டலாகக் கூறினார். அதற்கு அமீர், "இது வளர்ந்து வருவதன் ஒரு பகுதி, விஷயங்களைக் கற்றுக்கொள்வது. உங்களைப் பற்றிய உண்மைகளை நீங்கள் உணர்கிறீர்கள்" என்று பதிலளித்தார்.
அமீர்கானின் பதில்களை பார்த்த ரசிகர்கள் கெளரி ஸ்ப்ராட்டை திருமணம் செய்துக் கொள்ளாமல் வெறும் பார்ட்னராகவே வைத்துக் கொள்ள அமீர்கான் முடிவு செய்துவிட்டாரா என்றும் அதுதான் பெஸ்ட் இல்லையென்றால், தேவையற்ற விவாகரத்து சிக்கல்கள், ஜீவனாம்சம் என பிரச்னைகள் தொடரும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமீர்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான சித்தாரே ஜமீன் பர் படம் பெரிதாக ஓடவில்லை. ஆனால், பலரது பாராட்டுக்களை பெற்றது. மேலும், ரஜினிகாந்தின் கூலி படத்தில் தாஹா எனும் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











