ரஜினி, சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்க ஆர்வத்துடன் உள்ளேன்! - ஆமிர்கானின் புது ஸ்டன்ட்
வட இந்திய நடிகர்களுக்கு அவர்களின் படங்கள் வெளியாகும்போதுதான், தென்னிந்தியாவின் பெரிய நடிகர்களின் அருமை தெரியும். ஓடோடி சென்னைக்கும் ஹைதராபாதுக்கம் வந்து ரஜினிகாந்த், கமல் ஹாஸன், சிரஞ்சீவி போன்றவர்களின் பெருமை பாடுவார்கள். படம் வெளியானதும், வழக்கம் போல மும்பை, டெல்லியோடு நிறுத்திக் கொள்வார்கள் (இங்குள்ளவர்களும் அப்படித்தான் என்பது வேறு விஷயம்!).
குறிப்பாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் இந்திப் படங்களுக்கு இப்போது நல்ல வரவேற்பு உள்ளது. பெரிய தொகையை வசூலிக்கின்றன. ஷாரூக்கான், சல்மான் கான், அமிர்கான் போன்ற கான்களின் படங்கள் தமிழகத்தில் நல்ல வசூலைக் குவிக்கின்றன. ஆந்திராவில் கேட்கவே வேண்டாம்.

எனவே இந்த இரு மாநிலங்களிலும் தங்கள் படங்களை புரமோட் செய்வதில் அதிக கவனம் செலுத்துகின்றனர் பாலிவுட் கான்கள்.
மேலே குறிப்பிட்ட மூன்று கான்களுமே தங்கள் படங்கள் வெளியாகும் நேரத்தில் ரஜினியை தங்களின் மதிப்புக்குரிய நாயகனாக, மரியாதைக்குரிய சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடத் தவறுவதில்லை. ஷாரூக்கான் ஒரு படி மேலே போய் ரஜினியை கடவுள் என்றே குறிப்பிட்டுவிட்டார். தனது படங்களில் தவறாமல் ரஜினி பற்றிய காட்சிகளையும் வைத்து வருகிறார்.
சல்மான் கான் பலமுறை சூப்பர்ஸ்டார் என்றால் அவர் ரஜினி மட்டும்தான்... அவருடன் இணைந்து நடிக்க ஆசை என்று கூறி வந்துள்ளார்.
ஆமிர்கானும் இவர்களுக்கு சளைத்தவரல்ல. இவர் ஏற்கெனவே ஆடங்கி ஆடங்க் என்ற இந்திப் படத்தில் ரஜினியுடன் நடித்துள்ளார். இப்போது அவர் நடித்துள்ள டங்கல் படம் அதிக அரங்குகளில் தென்னிந்தியாவில் வெளியாகிறது. இதற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தார் ஆமிர். அப்போது, ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க பெரும் ஆர்வம் கொண்டிருப்பதாகக் கூறினார்.
ஹைதராபாதில் பேசுகையில், ரஜினி, சிரஞ்சீவி போன்ற மெகா ஸ்டார்களுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறினார்.
வெவரம்தான்!


Click it and Unblock the Notifications











