பெண் குழந்தைக்கு தந்தையான அருள்நிதி... வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
சென்னை : முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் பேரன்களில் ஒருவரான அருண்நிதி புகழ்பெற்ற நடிகராகவும் இருந்து வருகிறார். மு.க.தமிழரசுவின் மகனான இவர் டைரக்டர் பாண்டிராஜ் இயக்கிய வம்சம் படத்தின் மூலம் ஹீரோ ஆனார்.

உதயன், தகராறு, மெளனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம், பிருந்தாவனம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அருள்நிதி நடித்த களத்தில் சந்திப்போம் படம் சமீபத்தில் ஓடிடி.,யில் ரிலீஸ் ஆனது.
சாந்தமான முகத்துடன், ஆக்ரோஷமான நடிப்பு என தனக்கென தனி நடிப்பு ஸ்டைலை கொண்டுள்ள அருள்நிதி, ராதாமோகன் இயக்கிய பிருந்தாவனம் படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார் . இதில் விவேக்குடன் சேர்ந்து அவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
அருள்நிதி தற்போது டைரி, டிபிளாக், தேஜா வு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் பல்வேறு நிலைகளில் உள்ளன. விறுவிறுப்பாக தயாராகி வரும் இந்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. இதில் டி பிளாக் படம் எருமை சாணி படத்தை இயக்கிய விஜயகுமார் ராஜேந்திரன் இயக்குகிறார். இது கல்லூரியை மையமாகக் கொண்ட படமாகும்.
அருள்நிதி, 2015 ம் ஆண்டு கீர்த்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகிழ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் கீர்த்தனா மீண்டும் கர்ப்பமானார். இவர்களுக்கு இரண்டாவதாக நவம்பர் 27 ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த தகவலை ட்விட்டரில், மகிழ்ச்சியுடன் தனது ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் அருள்நிதி. மீண்டும் தந்தையானதை அருள்நிதி பெருமையாக சொன்னதை, ரசிகர்கள் வரவேற்று, வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அருள்நிதி தனது ட்விட்டர் பதிவில், எங்களின் புதிய அன்பை நாங்கள் வரவேற்கிறோம்...எங்களின் குட்டி தேவதை 27.11.2021 அன்று பிறந்துள்ளார். அன்பான மகிழ் அண்ணன் ஆகி உள்ளான். நாங்கள் மீண்டும் அம்மா, அப்பா ஆகி உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். இதை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











