எனது தாய், தந்தையின் இறப்புக்கு நிகரான பேரிழப்பு... கருணாநிதிக்கு நெப்போலியன் இரங்கல்!
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு நடிகர் நெப்போலியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்தவரான திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை காலமானார். அவரது உடல் லட்சக்கணக்கானோர் பங்கேற்க இறுதி ஊர்வலத்துக்கு பிறகு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து விருகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தவரும், நடிகருமான நெப்போலியன் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "உலகத் தமிழர்களிள் ஒப்பற்ற தலைவர், முத்தமிழ் அறிஞர், எனது அரசியல் குரு டாக்டர் கலைஞர் அவர்களது மறைவு எனது தாய், தந்தையின் இறப்புக்கு நிகரான பேரிழப்பு எங்கள் குடும்பத்திற்கு.
அவரது மறைவு தமிழ்நாட்டிற்கும், தமிழ் சமூகத்திற்கும், ஏன் இந்தியாவுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவர்களது குடும்பத்திற்கும் கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தையும், ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்," என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். திமுகவில் இருந்து விலகிய அவர் சிறிது காலம் பாரதிய ஜனதாவில் இணைந்து பணியாற்றினார். தற்போது நேரடி அரசியலில் ஈடுபடாமல், குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











