'பாவாட' பணத்தை மிச்சப்படுத்தி சென்னைக்கு உதவிய பிருத்விராஜ்
திருவனந்தபுரம்: தனது நடிப்பில் உருவாகியிருக்கும் 'பாவாட' படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ஒதுக்கிய பணத்தை மிச்சப்படுத்தி அதனை சென்னை மக்களுக்கு அளித்திருக்கிறார் நடிகர் பிருத்விராஜ்.
மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தமிழில் மொழி, சத்தம் போடாதே போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.
மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு பல்வேறு நடிக, நடிகையரும் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிருத்விராஜ் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாப் பணத்தை மிச்சப்படுத்தி சென்னை நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார்.

ஒரு இசை வெளியீட்டு விழா எனில் சுமார் 250 - 300 நபர்கள் வரை கலந்து கொள்வர். மேலும் கலந்து கொள்பவர்களுக்கு படக்குழுவினர் விருந்து அளித்து உபசாரம் செய்வர்.
இந்நிலையில் தனது படத்திற்கு நெருக்கமான வெறும் 25 பேரை அழைத்து தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக எளிமையாக நடத்தியிருக்கிறார் பிருத்விராஜ்.
இதற்கு படக்குழுவினரும் ஒத்துழைப்பு அளித்திருக்கின்றனர். தனக்கு நெருக்கமான சென்னை நகரம் துயரத்தில் இருக்கும்போது தனது இசை வெளியீட்டு விழாவை ஆடம்பரமாக நடத்த பிருத்விராஜ் விரும்பவில்லை.
தற்போது இந்த இசை வெளியீட்டு விழாவின் மூலம் மிச்சமான ரூ 1 லட்சத்தை சென்னை நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறது பிருத்விராஜ் அண்ட் கோ.


Click it and Unblock the Notifications











