டாக்டர்கள் எச்சரிக்கையையும் மீறி கவுதம் மேனன் படத்தில் நடிக்கும் அஜீத்!
சென்னை: மருத்துவர்கள் எச்சரிக்கையையும் மீறி கவுதம் மேனன் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் அஜீத் குமார்.
நடிகர் அஜீத்குமார் கார் ரேஸில் தீவிரமாக இருந்தபோதே அவரது முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்கு 5 முறைக்கு மேல் ஆபரேஷன் செய்திருக்கிறார். சமீபகாலமாக ஸ்டன்ட் காட்சிகளில் அவர் ரிஸ்க் எடுத்து நடிப்பதால் அவ்வப்போது அடிபட்டுக் கொள்கிறார்.

முன்பு ஆரம்பம் படத்திற்காக கார் சேசிங் சண்டை காட்சியில் டைவ் செய்யும்போது அவரது கால் காரின் முன்பக்க டயரில் சிக்கியதில் காயம் ஏற்பட்டது. அதற்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அட்வைஸ் செய்தனர். ஆனால் தற்காலிகமாக சிகிச்சை பெற்றுக்கொண்டவர் ஷூட்டிங் முடிந்தபிறகு கடந்த செப்டம்பரில் ஆபரேஷன் செய்துகொள்வதாக கூறினார்.
படம் முடிந்தும் அவர் அறுவை கிச்சைக்குப் போகாமல், வீரம் படத்தில் நடிக்கப் போய்விட்டார்.
அந்தப் படமும் வெளியாகிவிட்டது. அடுத்து கால் ஆபரேஷனுக்கு போக நினைத்த நேரத்தில்தான் இயக்குனர் கவுதம் மேனன் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு வந்தார்.
ஏற்கனவே சூர்யாவை வைத்து துருவநட்சத்திரம் என்ற படத்தை கவுதம் இயக்குவதாக இருந்து, கருத்துவேறுபாடு காரணமாக ரத்தானது.
ஒரு தர்மசங்கடமான சூழலில் தன்னிடம் கால்ஷீட் கேட்டு அணுகிய கவுதம் மேனனுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் நடிக்க ஒப்புக்கொண்டார் அஜீத்.
இதனால் மறுபடியும் அஜீத்தின் ஆபரேஷன் திட்டம் தள்ளிப்போயுள்ளது. விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில் அவர் பரிசோதனைக்காக டாக்டரை சந்தித்தார். உடனடியாக ஆபரேஷன் செய்யாவிட்டால் பிரச்னை பெரிதாக வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தனர்.
ஆனாலும் கவுதம் மேனனுக்கு கொடுத்த கால்ஷீட்டை தள்ளிப்போட அஜீத் விரும்பவில்லை. ஏற்கெனவே இருவரும் இணைவதாக இருந்து பின்னர் ரத்தானது. எனவே அந்த மாதிரியாகிவிடக் கூடாது என்பதால் கவுதம் மேனன் படத்தை முடித்துவிட்டு, வரும் செப்டம்பரில் ஆபரேஷன் செய்து கொள்ள முடிவு செய்துள்ளாராம் அஜீத்.


Click it and Unblock the Notifications











