“அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை“… அஜித் தரப்பு விளக்கம் !
சென்னை : நடிகர் அஜித்திற்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று அஜீத்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அஜித் நடித்த வலிமை படம் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிக்கொண்டு இருக்கிறது. இப்படத்திற்கு எதிர்மறையான பல விமர்சனங்கள் எழுந்தாலும் பாக்ஸ் ஆபிசில் நன்றாக கல்லாக்கட்டி வருகிறது. போனிகபூரின் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தில் ஹுமா குரோஷி அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். அஜித்தின் ரசிகர்கள் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.
அம்மா, தம்பி சென்டிமென்ட் திரைப்படமான இத்திரைப்படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று வெளியானது. இதனால், அஜித்தின் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அதிமுக தொண்டர்களும் இத்திரைப்படத்தை கொண்டாடினார்கள்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக பணிபுரிந்த பூங்குன்றன் சங்கரலிங்கம் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். அதில், புரட்சித்தலைவியின் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார். அம்மாவின் தொண்டர்களை அரவணைக்க விரும்புகிறாரா, அம்மாவின் கம்பீரம் படத்தின் பெயரில் இருக்கிறது. அஜித் விரைவில் அரசியலும் வருவார் என்று கூறியிருந்தார்.

இது இணையத்தில் மிகப்பெரிய பேசுபொருளானதை அடுத்து, அஜீத்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், அஜித் குமாருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை, எனவே இதுபோன்ற தவறான தகவல்களை ஊக்குவிப்பதைத் தவிர்க்குமாறு மரியாதைக்குரிய ஊடக உறுப்பினர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என அதில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











