அஜீத்தை நம்பினோர் கைவிடப்படார்... கோடம்பாக்கத்தில் இது புதுமொழி!
அவர் ஒரு புகைப்படக்காரர்... மகளுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை. மிக சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு சிகிச்சை தர லட்சங்களில் செலவாகும். எவ்வளவு என்றும் மருத்துவர்கள் சரியாகச் சொல்லவில்லை.
பலரிடமும் உதவி கேட்டு நடையாய் நடந்தார் புகைப்படக்காரர். சக நண்பர் இந்தப் பிரச்சினையை அஜீத்தின் காதுகளுக்குக் கொண்டு போனார்... புகைப்படக்காரரை அழைத்துப் பேசி உண்மை நிலை அறிந்த அஜீத், சிகிச்சை செலவு மட்டுமல்ல, அந்தக் குழந்தை தேறி வந்து படிக்க ஆகும் செலவையும் ஏற்றார்.

இன்னொரு புகைப்படக்காரர். இப்போது அவர் உயிருடன் இல்லைதான். ஆனாலும் அவருக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்தது. விஷயம் கேள்விப்பட்டு, கேட்காமலே உதவியவர்கள் இருவர். முதலாமவர் சூப்பர் ஸ்டார். அடுத்தவர் அவரது சிஷ்யரான அஜீத். சிகிச்சைக்குப் பின் ஒரு புதிய கேமராவையும் வாங்கிக் கொடுத்தார் ரஜினி என்பது பலருக்கும் தெரியாத தகவல்.
மற்றுமொரு சம்பவம்...
அஜீத்தின் ஒரு படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது, சென்னைக்குப் பக்கத்தில்தான்.
அந்த இடத்துக்கு அருகில் கடை வைத்திருக்கும் ஒரு முதியவர் தினந்தோறும் அங்கு வருவார். ஒரு துண்டுச் சீட்டை அங்கிருப்பவர்களிடம் தருவார். பின் சென்று விடுவார். செட்டிலிருந்த பலரும் அந்த சீட்டைப் பார்த்துவிட்டு முடிந்த தொகையை வசூலிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார் அஜீத்.
தன் உதவியாளரை விட்டு அந்த சீட்டை வாங்கி வரச் சொன்னவர், அதிலிருந்த முதியவரின் கோரிக்கையைப் பார்த்தார். ஒரு சிறுவனின் மருத்துவ செலவுக்கு சில லட்சங்கள் தேவைப்பட்டன. அதிலிருந்த விவரங்களை வைத்து சிறுவன் இருந்த மருத்துவமனைக்கே உதவியாளரை அனுப்பி வைத்து விசாரித்தார். எவ்வளவு தேவை என்பதை அறிந்து, ஒரே செக்கில் மொத்தப் பணத்தையும் மருத்துவமனைக்குத் தந்தவர், மேலும் தேவை என்றால் பெரியவரிடம் கேட்க வேண்டாம், தனக்குத் தெரியப்படுத்தவும் என்று கூறிவிட்டு வந்தார்.
இதில் ஹைலைட் என்ன தெரியுமா... இந்த உதவியைச் செய்தது தான்தான் என்ற விஷயம் மட்டும் யாருக்கும், குறிப்பாக உதவி கேட்ட அந்த பெரியவருக்குக் கூடத் தெரியக்கூடாது என்று கட்டளையிட்டதுதான். இன்று அந்த உதவியை செட்டிலிருந்தவர்கள் செய்ததாகத்தான் பெரியவர் நினைத்துக் கொண்டிருக்கிறாராம்.
கேட்க அதிசயமாக இருந்தாலும், இப்படி நிறைய 'தர்ம கதைகள்' அஜீத் பற்றி. அவற்றில் சமீபத்தில் நடந்த இன்னும் ஒரு சம்பவத்தையும் இங்கே தருகிறோம்.
தமிழ் பத்திரிகைகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபாற்றும் ஓவியர் ஒருவர் தனது மகன்களை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும் என்று விரும்பினார். இரண்டு மகன்களும் நன்றாக படித்து வருகிறார்கள்.
ஒரு சமயத்தில் இளையமகன் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கும்படியும்,அங்கு வேலை செய்துகொண்டே படிக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.
வேலைபார்த்துக்கொண்டே படிப்பதாக மகன் கூறிய உறுதியை நம்பி ஒருவழியாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் ஓவியர். ஆனால் அங்கு பகுதி நேர வேலை செய்ய கல்லுரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
வேறு வழியில்லாமல் இங்கிருந்தே படிப்பு செலவையும் அனுப்பி வைக்க வேண்டிய கட்டாயம் ஓவியருக்கு ஏற்பட்டது. எல்லா கடன் வாங்கி மகனுக்கு பணத்தை அனுப்பி வைத்தார் ஓவியர்.
மகனுக்கு இது இறுதியாண்டு ஆனால் இறுதி ஆண்டுக்கான பணத்தை தந்தையால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. பணம் கட்டவில்லை என்றால் கல்லூரியிலிருந்து மகனை வெளியேற்றும் நிலை உருவானதாம்.
வேறு வழியில்லாமல் தன்னிடம் அன்பு பாராட்டும் ஒரு நடிகரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஏதாவது உதவி கிடைக்குமா என்று கேட்டாராம் ஓவியர்.
அதற்கு நடிகர், தன் மகன் நடத்தும் ஒரு நிறுவனத்திடம் கேட்கச் சொல்ல, விதிமுறைகள் இடம் தராததால் உதவ முடியவில்லை என்று கூறிவிட்டார்களாம்.
அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த ஓவியரிடம், சில நபர்கள் அஜீத்தை தொடர்பு கொள்ள கூறினர். நண்பர்களின் உதவியுடன் அஜீத்தை தொடர்பு கொண்டவர், நிலைமையைச் சொன்னாராம்.
சொல்லிவிட்டு வீடு வந்து சேர்வதற்குள் அவருக்கு நல்ல செய்தி வந்து சேர்ந்தது. பையன் குறித்த முழு விபரங்களை கொடுத்துட்டு கவலைப்படாமல் இருங்கள்.. உங்க பையனின் முழு படிப்பு செலவின் முழுதொகையும் நானே கட்டிவிடலாம் என்று அஜீத் சார்பில் தெரிவிக்கப்பட, கண்ணீர் மல்க அவர் இருக்கும் திசை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டாராம் ஓவியர்!
இப்போ சொல்லுங்க.. தலைப்பு சரிதானே!


Click it and Unblock the Notifications











