திடீர் என தாங்க முடியாத வலி: முன்கூட்டியே அஜீத்துக்கு ஆபரேஷன் நடந்தது
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜீத்துக்கு வியாழக்கிழமை இரவு முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடிக்கையில் அஜீத்துக்கு வலது முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. உடனே சிகிச்சை பெற்ற அவர் தொடர்ந்து படத்தில் நடித்துக் கொடுத்தார். அடிபட்ட இடங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
அஜீத்தோ தான் ஒப்புக் கொண்ட படங்களை முடித்த பிறகு அறுவை சிகிச்சை செய்ய அவர் முடிவு செய்தார்.

வலி
அடிபட்ட முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அவ்வப்போது வலி இருந்தபோதிலும் அதை பொருட்படுத்தாமல் அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வந்தார்.

மறுபடியும்
ஏற்கனவே வலியுடன் நடித்து வந்த அஜீத் வேதாளம் படப்பிடிப்பின் கடைசி நாளில் கலந்து கொண்டபோது முன்பு காலில் அடிபட்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டது. இதையடுத்து அவர் ஸ்டிக் உதவியுடன் நடக்க ஆரம்பித்தார்.

ஆபரேஷன்
அஜீத்தை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். அவரும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து வரும் 24ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

திடீர் என
அஜீத்துக்கு திடீர் என வலி அதிகமாகி அவர் துடித்ததால் நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று இரவு முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தார்
மருத்துவமனையில் இருக்கும் அஜீத்தை அவரது மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தார் உடன் இருந்து கவனித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











