இனி அமீரும் ஹீரோ!
ஒரு வழியாக அமீரும் ஆகி விட்டார் ஹீரோ. அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப் போகிறார்.
அமீரை ஹீரோவாக்க பலரும் முயன்றனர். ஆனால் பிடி கொடுக்காமல் தப்பி வந்தார் அமீர்.பருத்தி வீரன் பெரும் ஹிட் படமாக, அமீரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியது. அமீர்தான் அந்தப் படத்தின் நாயகன் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதை அமீர் மறுத்து வந்தார்.
தனது அடுத்த படமான கண்ணபிரானின் கதையை ரெடி செய்து விட்டார் அமீர். அதில் நாயகனாக நடிக்கப் போவது ஜெயம் ரவி.
மறுபக்கம், அமீரை ஹீரோவாக்கும் முயற்சிகள் வெற்றி பெற்று அவரும் இப்போது ஹீரோவாகி விட்டார். திருடா திருடி, பொறி ஆகிய படங்களை இயக்கிய சுப்ரமணியம் சிவா இயக்கத்தில், யோகி என்ற படத்தில் நடிக்கவுள்ளார் அமீர்.
கண்ணபிரானுக்கு முன்பாக யோகியில் நடித்து முடித்து விட தீர்மானித்துள்ளாராம் அமீர். மலையாளத்தில் மம்முட்டி நடித்த பிக் பீ என்ற வெற்றிப் படத்தின் ரீமேக்தான் யோகி.
இந்தப் படத்தை தனது டீம் ஒர்க் புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக சொந்தமாக தயாரிக்கிறார் அமீர். இப்போது படத்தின் நாயகியைத் தேர்வு செய்வதில் அமீரும், சுப்ரமணியம் சிவாவும் பிசியாக உள்ளனர்.
திரிஷாவை இதுதொடர்பாக அமீர் அணுகியுள்ளார். அவரும் ஏற்றுக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மெளனம் பேசியதே படத்தின் மூலம், தொய்ந்து கிடந்த திரிஷாவுக்கு பிரேக் கொடுத்தவர் அமீர் என்பது நினைவிருக்கலாம்.
இந்தப் படத்திற்குப் பிறகுதான் திரிஷாவின் மார்க்கெட் சூடு பிடித்து சாமியாட்டம் ஆரம்பித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விரைவில் அமீர் ஹீரோவாக அமர்க்களப்படுத்தப் போகும் படத்தின் அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளன.
நல்லதுண்ணே!


Click it and Unblock the Notifications











