அர்ஜூனின் புது 'வக்கீல்'!

தமிழ்நாட்டில் அர்ஜூனாகவும், கன்னட தேசத்தில் அர்ஜூன் சர்ஜாவாகவும் அறியப்படும் அர்ஜூன், தமிழில் சில படங்களைத் தயாரித்துள்ளார். இப்போது கன்னடப் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளார்.
தனது உறவினரான சிரஞ்சீவிக்காக இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் அர்ஜூன். வாயுபுத்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையையும் அர்ஜூனே பார்த்துக் கொள்கிறார். முன்னாள் நாயகன் அம்பரீஷுக்குப் படத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
படத்தின் முக்கியமான மேட்டர் என்னவென்றால் நாயகி தன்யா வக்கீல்தான். படு க்யூட்டாக இருக்கும் தன்யா பார்ப்பவர்களை அசரடிக்க வைக்கும் அழகுடன் செம கெட்டப்பில் இருக்கிறார்.
கடந்த ஆண்டு நடந்த மிஸ் இந்தியாப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியவர். மும்பையிலிருந்து வந்திறங்கியுள்ள அசத்தல் தேவதை.
மிஸ் இந்தியாப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இவர், மிஸ் டூரிசம் இன்டர்நேஷனல் போட்டியில் முதல் ரன்னராக தேறியவர்.
மாடலிங்கில் கலக்கிக் கொண்டிருக்கும் தன்யாவை, நடிக்க கூப்பிட்டு வந்திருக்கிறார் அர்ஜூன். கன்னடத்தில் அறிமுகமானாலும் கூட விரைவிலேயே தமிழையும் இந்தப் புயல் மையம் கொண்டு ரசிகர்களை மயங்கடிக்கும் என்று நம்பலாம்.
வாயுபுத்ரா படம் குறித்த அறிவிப்பை பெங்களூரில் செய்தியாளர்களிடம் வெளியிட்ட அர்ஜூன், அப்படியே இன்னொரு நல்ல செய்தியையும் சொன்னார்.
சென்னையில் அனுமன் கோவில் ஒன்றைக் கட்டி வருகிறாராம் அர்ஜூன். அனுமனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று கூறிய அர்ஜூன் அது நனவாகப் போவதாக தெரிவித்தார்.
அர்ஜூன், தீவிர அனுமன் பக்தர். அனுமனுக்காக ஒரு கோவிலைக் கட்டத் தீர்மானித்த அவர் சென்னையில் உள்ள தனது பெரு பண்ணை வளாகத்தில் இந்தக் கோவிலை நிர்மானிக்க தீர்மானித்தார்.
கடந்த ஆண்டு கோவில் கட்டும் பணியைத் தொடங்கினார். இப்போது அது முடியும் தருவாயை நெருங்கியுள்ளதாம்.
இந்தக் கோவிலில் 28 அடி உயரம் கொண்ட, ஒரே கல்லினால் ஆன அனுமன் சிலை வைக்கப்படவுள்ளது இக்கோவிலின் சிறப்பம்சமாகும். பெங்களூரைச் சேர்ந்த அசோக் குடிகர் என்ற சிற்பிதான் இந்த சிலையையும், கோவிலையும் வடிவமைத்துள்ளார்.
அமர்ந்த நிலையில் இந்த அனுமன் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சிலை வைக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறையாம்.
அனுமன் கோவில் குறித்து அர்ஜூன் கூறுகையில், அனுமனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாகும். இதுதான் எனது வாழ்க்கையின் மிகப் பெரிய, உண்மையான சாதனையாகும். இந்த கோவிலின் பின்னணியில் வேறு எந்தக் காரணமும் இல்லை.
ரூ. 75 லட்சம் செலவில் கோவிலும், அனுமன் சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லினால் ஆன இந்த சிலையின் உயரம் 28 அடியாகும். அகலம் 12 அடியாகும். சிலையின் அடர்த்தி 7 அடியாகும்.
எனது பண்ணை வளாகத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை கோவிலுக்காக ஒதுக்கியுள்ளேன்.
எனது கனவுக் கோவில் இது. இந்தக் கோவிலை எந்தவித ஆடம்பரமும், விளம்பரமும் இன்றி திறக்கத் தீர்மானித்துள்ளேன் என்றார் அர்ஜூன்.


Click it and Unblock the Notifications











