'காவியத்தலைவன்' வசந்தபாலனுடன் கைகோர்க்கும் 'டிமாண்டி காலனி' அருள்நிதி
சென்னை: இயக்குநர் வசந்தபாலனின் அடுத்த படத்தில் நடிகர் அருள்நிதி ஹீரோவாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பாண்டிராஜின் 'வம்சம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் அருள்நிதி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டிமாண்டி காலனி 2015 ன் வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியது.
தற்போது இயக்குநர் அறிவழகனின் 'ஆறாது சினம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அருள்நிதி தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலனின் அடுத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று கூறுகின்றனர்.

2002 ம் ஆண்டு ஆல்பம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வசந்தபாலன், ஆல்பம் பெரியளவில் ஹிட்டடிக்காத நிலையில் 4 ஆண்டுகள் காத்திருந்து வெயில் மூலம் தன்னை நிரூபித்துக் காட்டினார்.
அங்காடித் தெரு, அரவாண், காவியத் தலைவன் என்று தொடர்ந்து தரமான படங்களை எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் வசந்தபாலன் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவரது படத்தின் ஹீரோவாக நடிக்கும் அதிர்ஷ்டம் அருள்நிதிக்குக் கிடைத்திருக்கிறது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொங்கல் கழித்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











