சக்ரவியூஹா மூலம் கன்னட சினிமாவுக்கு வரும் அருண் விஜய்!
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்து பாராட்டுகளைப் பெற்ற அருண் விஜய், அடுத்து கன்னடத்தில் 'சக்ரவ்யுஹா' திரைப்படம் மூலம் அறிமுகமாகிறார்.
இந்தப் படம் தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய 'இவன் வேற மாதிரி' படத்தின் கன்னடப் பதிப்பு. 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கத்தில், புனித் ராஜ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார் அருண் விஜய்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து அருண் விஜய் கூறுகையில், "கன்னட சினிமா மீது எனக்கொரு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு. எனக்கு சில வாய்புகள் நடிக்க வந்திருந்தாலும், சரியான கதாப்பாத்திரத்திற்காக நான் காத்து கொண்டிருந்தேன். அதன் பலனாக எனக்கு கிடைத்த திரைப்படம் தான் 'சக்ரவ்யுஹா," என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், "இயக்குனர் சரவணன் படத்தில் நடிப்பது, ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பதற்கு சமம். அந்த அளவிற்கு அவரின் கதையும், வேடங்களும் வலிமை வாய்ந்ததாக இருக்கும். அதே போல் புனித் சாருடன் இணைந்து நடிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். நாங்கள் இருவருமே சினிமா பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால் எங்கள் இருவரிடையே நல்ல நட்பும், மரியாதையும் உண்டு.
பொதுவாக சண்டை காட்சிகளை அவ்வளவு எளிதில் பதிவு செய்ய முடியாது. ஆனால் எங்களுக்குள் இருந்த புரிதலும், ஒருங்கிணைப்பும் படத்தின் காட்சிகளை தத்ரூபமாக உருவாக்க உதவியது. ஹீரோ - வில்லன், இருவரின் கதாப்பாத்திரங்களும் சமமாக அமைந்திருப்பது படத்தின் மிக பெரிய பிளஸ்! அது மட்டுமில்லாது, கன்னட சினிமா தங்களின் தரமான படைப்புகளால் சக மொழி திரைப்படங்களோடு போட்டியிட்டு கொண்டிருக்கும் காலமிது. இதற்கு சான்றாக விரைவில் வெளியாகும் 'சக்ரவ்யுஹா' திரைப்படம் அமையும்," என்றார்.


Click it and Unblock the Notifications











