புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்!- ஆர்யா
இனி வரும் படங்களில் புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று நடிகர் ஆர்யா தெரிவித்தார்.
"வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என்ற திரைப்படத்தின் விளம்பரத்திற்காக வெள்ளிக்கிழமை மதுரை வந்த நடிகர் ஆர்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"இது என்னுடைய 25-ஆவது படம். ஒவ்வொரு நடிகருக்கும் 25-ஆவது படம் என்பது ஒரு மைல்கல். இதனை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான "ஷோ பீப்பிள்' நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளேன்.
வருகிற 14-இல் படம் வெளிவர உள்ளது.
நடிகர் சங்கத் தேர்தலில் இளைஞர்கள் பொறுப்பு வகிக்க வேண்டும் என்பது மட்டுமே விஷால் அணியின் விருப்பமாகும். இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தால் பல நல்ல காரியங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும். இதைக் கருத்தில் கொண்டுதான் நடிகர் சங்கத் தேர்தலில் இளம் நடிகர்கள் போட்டியிடுகிறோம்.
திரைப்படங்களில் நடிகர்கள் மது அருந்துவது, புகைபிடிக்கும் காட்சிகள் கதையின் தேவையைப் பொருத்து அமைக்கப்படுபவை. பொதுமக்கள் யாரும் அவற்றைப் பின்பற்ற வேண்டாம். ஒரு நடிகனாக எனக்கும் சமூக அக்கறை உண்டு. இதைக் கருத்தில் கொண்டு இனி வரும் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளைத் முடிந்தவரை தவிர்க்க முடிவெடுத்துள்ளேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











