'அவளை' பார்த்து இந்த நாடே மிரளப் போகுது: சித்தார்த்
சென்னை: அவள் படத்தை பார்த்து இந்த நாடே பயப்படப் போகிறது என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி உள்ளிட்டோர் நடித்துள்ள அவள் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. ட்ரெய்லரே பயப்பட வைக்கும்படி உள்ளது என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில் அவள் பட செய்தியாளர்கள் சந்திப்பின்போது சித்தார்த் பேசியதாவது,

மணிரத்னம்
என் இயக்குனரும், நானும் 16-17 வருஷமாக சிறந்த நண்பர்களாக உள்ளோம். ஏன் என்றால் இரண்டு பேருமே ஒரே நாளில் தான் மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தோம்.

ஸ்கிரிப்ட்
இந்த படத்தை இரண்டு பேரும் சேர்ந்து தான் எழுதியிருக்கிறோம். அவள் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஒரு த்ரில்லர் படம் உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்படுவது அரிது. இந்த மூலக்கதை எங்களுக்கு தெரிந்தவருக்கு நடந்த கதை.

திரைக்கதை
இந்த கதை திரைக்கதையாக எழுத எங்களுக்கு நான்கரை ஆண்டுகள் ஆனது. நானும், மிலிந்தும் ஹாரர் பட ரசிகர்கள். நம்ம ஊரில் அனைவரும் பேசும்படி ஒரு ஹாரர் படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். அந்த படத்தில் அனைவரையும் கன்னாபின்னா என்று பயமுறுத்த வேண்டும்.

தியேட்டர்
பயப்பட போறீங்க என்று சொல்லி அவர்களை தியேட்டரில் அமர வைத்து பயமுறுத்த வேண்டும் என்பது எங்களின் கனவு, ஆசை. அந்த கனவு இந்த படம் மூலம் உண்மையாகிறது.

அதுல் குல்கர்னி
அவள் படத்தின் மிகப்பெரிய பலம் ஆண்ட்ரியா. நானும் அதுல் குல்கர்னியும் பல ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடித்துள்ளோம். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி என்றார் சித்தார்த்.


Click it and Unblock the Notifications











