இந்தா பிடிங்க மொத்த கால்ஷீட்டும்... பாகுபலி-2க்காக தூக்கிக் கொடுத்த பிரபாஸ்
சென்னை: வரும் 2016 ம் ஆண்டு முழுவதையும் பாகுபலி 2 படத்திற்காக ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் பாகுபலி நாயகன் என்று அறியப்படும் பிரபாஸ்.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாகுபலி. சரித்திரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படம் உலகமெங்கும் சுமார் 600 கோடியை வசூல் செய்தது.

மேலும் இந்தியாவில் அதிகம் வசூலித்த படங்களில் 3 வது இடத்தையும் இப்படம் பெற்றது. இந்நிலையில் பாகுபலி 2 படத்தன் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவிருக்கிறார் ராஜமௌலி.
இப்படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்னை உலகமெங்கும் கொண்டு சேர்த்த இப்படத்திற்காக 2016 ம் ஆண்டு முழுவதையும் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் பிரபாஸ்.
முழுதாக 190 நாட்களை இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சுளையாக அள்ளிக் கொடுத்திருக்கிறார் பிரபாஸ். கிட்டத்தட்ட 10 மாதங்கள் இப்படத்தின் படப்பிடிப்பில் பிரபாஸ் கலந்து கொள்வார் என்று கூறுகின்றனர்.
ஒவ்வொரு 10 நாள் மற்றும் 20 நாள் படப்பிடிப்பிற்குப் பின்னர் சிறு ஓய்வு எடுத்துக் கொள்ள படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடியும்வரை வேறு படங்கள் எதையும் பிரபாஸ் ஒப்புக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் பாகுபலி 2 படத்திற்காக அதிகரித்த தனது உடல் எடையை அமெரிக்கா சென்று குறைத்துக் கொண்டிருக்கிறாராம் படத்தின் நாயகி அனுஷ்கா.


Click it and Unblock the Notifications











