பிச்சகாடு வெற்றி... தெலுங்கிலும் பிஸியாகும விஜய் ஆன்டனி!
பிச்சைக்காரன் படத்தின் தெலுங்கு ரீமேக் யாருமே எதிர்பாராத வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கிலும் விஜய் ஆன்டனிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எஸ் ஏ சந்திரசேகர் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகனாகி தனக்கென்று தனி பாணி அமைத்து வெற்றிகரமான நட்சத்திரமாகிவிட்டவர் விஜய் ஆன்டனி.

இதுதான் வெற்றி
இவரது பிச்சைக்காரன் படம் தமிழில் நல்ல வெற்றியைப் பெற்றது. இந்தப் படம் தங்களுக்கு பெரும் லாபம் ஈட்டித் தந்ததாக விநியோகஸ்தர்களே அறிவிக்கும் அளவுக்கு வெற்றி பெற்றது.

பிச்சகாடு
இந்தப் படம் தெலுங்கில் 'பிச்சகாடு' என்கிற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. கடந்த வாரம் இறுதியில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியான 'பிச்சகாடு' நேரடி தெலுங்குப் படங்களுக்கு இணையான வெற்றியைப் பெற்றுள்ளது.

விஜய் ஆன்டனி பேட்டி
இதுகுறித்து விஜய் ஆன்டனி கூறுகையில், "இந்த வெற்றி இயக்குநர் சசிக்கும், தெலுங்கில் இந்தப் படத்தை வெளி இட்ட லக்ஷ்மன் அவர்களுக்கும் உரியது என்றுதான் சொல்வேன்.
அனைத்து மொழி ரசிகர்களும் கொண்டாடக்கூடிய ஒரு கதைக் கரு, தெளிவான திரைக்கதை அமைப்பு, நேர்த்தியான இயக்கம் என சசி வழங்க, நான் என்ன சளைத்தவனா என்று மிக பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி, அதிக அளவில் திரை அரங்குகளுக்கு எடுத்து 'பிச்சகாடு' படத்தின் வெற்றியை ஊர்ஜிதம் செய்தார் லக்ஷ்மன்.

பொறுப்பு
தற்போது தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நான் ஒரு நடிகனாக வெற்றி பெற்று இருப்பது எனக்கு மிகப் பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறது. தமிழ்த் திரை உலகில் இருந்து வரும் நடிகர்கள் பொதுவாக தெலுங்கில் நிலைப்பதில்லை என்ற கூற்றை என் அடுத்தடுத்த படங்களின் கதை, மற்றும் மற்ற அம்சங்கள் பொய்யாக்கும் என்று நம்புகிறேன்.

தென்னிந்திய நட்சத்திரமாவேன்
இந்த வெற்றி ஒரு நடிகனாக என்னை இன்னமும் மேம்படுத்தி தென்னிந்தியாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வர வைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











