பிரதீப் ரங்கநாதனுக்காக பதிலடி கொடுத்த சரத்குமார்.. நாட்டாமை சரியான தீர்ப்பு கொடுத்ததாக பிரபலம் புகழாரம்
சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்திவாசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டியூட் திரைப்படம் 17ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஏற்கனவே பிரதீப் நடித்த படங்கள் வரிசையாக மெகா ஹிட்டாகியிருக்கின்றன. எனவே இப்படத்தின் மீது ஹைப் எகிறியிருக்கிறது. சூழல் இப்படி இருக்க ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தெலுங்கு பெண் பத்திரிகையாளர் பிரதீப் ரங்கநாதனை சீண்டியதற்கு சரத்குமார் பதிலடி கொடுத்தார். அதற்கு பாராட்டுக்கள் பிரபலங்கள் மத்தியிலும் கிடைத்துவருகின்றன.
கோமாளி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக தானே ஹீரோவாக நடித்து லவ் டுடே படத்தை இயக்கினார். அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காண்பித்தது. மூன்றாவதாக நடித்த டிராகன் படமும் 100 கோடி ரூபாயை வசூலித்தது.
ஆச்சரியத்தில் திரையுலகம்: மூன்று படங்கள் வரிசையாக ஹிட்; இரண்டு படங்கள் தொடர்ந்து நூறு கோடி ரூபாய் கிளப் என்று மாஸ் காண்பித்த பிரதீப் ரங்கநாதனை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் ஆச்சரியத்தில் மூழ்கியது. கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அவரது மார்க்கெட் வேல்யூவும் இரண்டு படங்களுக்கு கணிசமாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டியூட் பிரதீப் ரங்கநாதன்: அவர் இப்போது டியூட் படத்தில் நடித்திருக்கிறார். கீர்த்திவாசன் இயக்கியிருக்கிறார். சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். 17ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இப்படத்தையும் ஹிட்டாக கொடுத்து ஹீரோவாக ஹாட்ரிக் வெற்றியை பெறுவாரா என்று பலரும் எதிர்பார்த்திருக்கிறார்கள். ட்ரெய்லரை பார்க்கையில் அதற்கான சமிக்ஞைகளும் தெரிகின்றன. இன்னும் மூன்று நாட்களில் ரிசல்ட் வந்துவிடும்.
சீண்டிய பத்திரிகையாளர்: படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சூடுபிடித்திருக்கின்றன. அந்தவகையில் ஆந்திராவில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள். இதில் பிரதீப், சரத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அப்போது பிரதீப்பிடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர், நீங்கள் ஹீரோ மெட்டீரியல் இல்லை. நீங்கள் முன்னேற காரணம் கடின உழைப்பா அல்லது அதிர்ஷ்டமா?' என சீண்டினார். அதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த சரத்குமார், 'உருவத்தை வைத்து ஹீரோவை முடிவு செய்யக்கூடாது' என்றார்.
பாராட்டிய ப்ளூ சட்டை மாறன்: சரத்குமாரின் இந்த பதிலடி அனைவரிடமும் பாராட்டை பெற்றிருக்கிறது. ஒரு சீனியர் ஹீரோவாக ஜூனியருக்கு தகுந்த பாதுகாப்பையும், சப்போர்ட்டையும் கொடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் அவரை வாழ்த்திவருகிறார்கள். இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "மேடம்.. ப்ரதீப் ஒரு இயக்குநரும்கூட. தொடர்ந்து மூன்று மெகா ஹிட் படங்களை.. பெரிய ஹீரோ மெட்டீரியல்கள்கூட தர முடியாத காலம் இது. இது உங்கள் தெலுங்கு திரையுலகிற்கும் பொருந்தும். ஆகவே.. இந்த நையாண்டியை இங்கே காட்ட வேண்டாம். சரியான தீர்ப்பு சொன்ன நாட்டாமை சரத் அவர்களின் கம்பீரத்திற்கு பாராட்டுகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











