மடோன் அஸ்வினுடனான படம் தாமதம்.. சுதாரித்த விக்ரம்.. வந்தது புதிய பட அறிவிப்பு
சென்னை: விக்ரமின் நடிப்பில் கடைசியாக வெளியான வீர தீர சூரன், தங்கலான் ஆகிய இரண்டு படங்களுமே கலவையான விமர்சனத்தையே பெற்றது. அடுத்ததாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தர். ஆனால் சில காரணங்களால் படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் அவரது புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
சியான் விக்ரம் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர். உடலை வருத்தி நடிப்பதென்றால் அவருக்கு கைவந்த கலை. ஆனால் கமர்ஷியல் ரீதியாக ஒரு தரமான ஹிட் கொடுத்து நீண்ட வருடங்களாகிவிட்டன. இருந்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து ஒரு ஹிட்டுக்காக முயன்றுகொண்டே இருக்கிறார். பா.இரஞ்சித் இயக்கத்தில் நடித்த தங்கலான் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இரஞ்சித்தின் ஆதங்கம்: தங்கலான் படம் பெரிய ஹிட்டாகாதது பலருக்கும் ஆச்சரியத்தையே கொடுத்தது. விக்ரமின் அசுரத்தனமான உழைப்பு, இரஞ்சித்தின் சிறப்பான இயக்கம், ஜிவியின் அட்டகாசமான இசை என அத்தனை இருந்தும் படம் ஏனோ க்ளிக் ஆகவில்லை. மேலும் சமீபத்தில்கூட பைசன் பட விழாவில், விக்ரமுக்கு இன்னும் சரியான அங்கீகாரம் கிடைக்காததை நினைத்து இரஞ்சித் ஆதங்கமும் பட்டிருந்தார்.

வீர தீர சூரனும் அப்படித்தான்: தங்கலான் சொதப்பியது வீர தீர சூரன் காப்பாற்றும் என சியானின் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஏனெனில் இப்படத்துக்கு முன்பு அருண் குமார் இயக்கிய சித்தா மெகா ஹிட். ஆனால் விக்ரமின் ராசியோ என்னவோ இந்தப் படமும் சுமார் ரகம்தான். என்ன செய்தாலும் ஹிட் கொடுக்க முடியாததை நினைத்து கண்டிப்பாக சியான் சோகம்தான் அடைந்திருப்பார்.
மடோன் அஸ்வினுடன் படம்: ஆனால் விடாமுயற்சிக்கு பெயர் போன அவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும், திறமையான இயக்குநர்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்தவகையில் மண்டேலா, மாவீரன் படங்களின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்தப் படத்தின் கதையை இன்னும் அஸ்வின் எழுதி முடிக்காததால் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயிருக்கிறது.
புதிய படம்: இந்நிலையில் அந்தப் படத்துக்கு பதிலாக புதிய படத்தில் நடிக்கிறார் அவர். அந்தவகையில் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தை போடி கே.ராஜ்குமார் என்பவரது இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியிருக்கிறது. இப்படத்தை முடித்துவிட்டு மடோன் அஸ்வின் இயக்கத்தில் சியான் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











