காதல் கொலைகளுக்கு சினிமா காரணமாக இருக்க முடியாது... அடித்துச் சொல்கிறார் விஜய் சேதுபதி
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் காதல் கொலைகளுக்கு சினிமா காரணமாக இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
தமிழகத்தில் சமீபகாலமாக ஒருதலைக் காதல் கொலைகள் அதிகரித்துள்ளன. இந்தக் கொலைகளுக்கு முக்கிய காரணம் சினிமா தான் எனக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சினிமாவைப் பார்த்து தங்களையும் நாயகனாக கருதிக் கொள்ளும் சிலர், எப்படியும் அழகான பெண்களை காதலில் விழ முயற்சிப்பதும், பின் அது இயலாத போது கொலை செய்வதும் அதிகரித்து வருவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால், இது தவறான கருத்து எனத் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. 'ரசிகர்கள் மனதில் புதிதாக எதையும் திணிக்க முடியாது. காட்சிகள் பிடித்து இருந்தால் கைதட்டி ரசிப்பார்கள். அதை வாழ்க்கைக்கு கொண்டு வர மாட்டார்கள்' என்பது அவரது வாதம்.
மேலும் இது தொடர்பாக தனது றெக்க படவிழாவில் விஜய் சேதுபதி கூறுகையில், "நான் கதைகளையும் கதாபாத்திரங்களையும் கவனமாக தேர்வு செய்கிறேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடிக்கவும் அக்கறை எடுக்கிறேன். 'றெக்க' கதை மிகவும் பிடித்தது. இதில் அதிரடி நாயகனாக இன்னொரு பரிணாமத்தில் என்னை பார்க்கலாம். திரைக்கதை ஜாலியாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். முந்தைய படங்களின் சாயல் இருக்காது.
சமூகத்தில் தற்போது நடந்து வரும் காதல் கொலைகளுக்கு சினிமா காரணம் என்று சொல்லப்படுவதை நான் ஏற்க மாட்டேன். ரசிகர்கள் மனதில் புதிதாக எதையும் திணிக்க முடியாது. காட்சிகள் பிடித்து இருந்தால் கைதட்டி ரசிப்பார்கள். அதை வாழ்க்கைக்கு கொண்டு வர மாட்டார்கள்.
காதல் கொலைகள் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுகிறவர்கள் மனதில் ஏற்கனவே அதுபோன்ற உணர்வுகள் பதிந்து இருக்கிறது. அந்த தாக்கத்தில்தான் தவறான காரியங்களில் ஈடுபடுகிறார்கள்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











