சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன்.. இன்று டெவில் ரிலீஸ்.. ரசிகர் மரணம்.. விடாமல் துரத்துதே
பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷன் நடிப்பில் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் டெவில் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸாகியிருக்கிறது. தர்ஷன் சிறையில் இருக்கும் சூழலிலும் ரிலீஸாகியிருக்கும் படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் முண்டியடித்து தியேட்டருக்கு சென்றார்கள். இது ஒருபக்கம் இருக்க படம் பார்த்துவிட்டு திரும்பியபோது விபத்தில் சிக்கி ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மேலும் துயரத்தை கொடுத்திருக்கிறது.
கன்னட திரையுலகத்தை சேர்ந்தவர் தர்ஷன். 90களில் தனது நடிப்பு பயணத்தை ஆரம்பித்து சாண்டல்வுட்டில் ஃபேமஸான நடிகராக இருப்பவர்தான் தர்ஷன். ஏராளமான ஹிட் படங்களில் நடித்திருக்கும் அவருக்கு என்று கர்நாடகாவில் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவரது படங்கள் ரிலீஸானால் போதும் தங்கள் வாழ்வில் திருவிழா போல் கொண்டாடுவதற்கு தியேட்டர்களுக்கு அவர்கள் படையெடுக்கவும் செய்வார்கள். அவ்வளவு வெறித்தனமான அன்பை அவர் மீது வைத்திருக்கிறார்கள்.
தர்ஷன் செய்த கொலை: சூழல் இப்படி இருக்க கர்நாடக மாநிலம் சித்ராதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகா சாமி என்பவர் நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பதியதாக கூறி அவரை கடத்தி வந்து சித்ரவதை செய்து கொலை செய்தார் தர்ஷன். இந்த விவகாரம் பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார் தர்ஷன்.

நீதிபதியிடம் கெஞ்சிய தர்ஷன்: பிறகு ஜாமீனிலும் வெளியே வந்தார். ஆனால் அவரது ஜாமீனுக்கு எதிராக கர்நாடக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜாமீனை ரத்து செய்ததால் மீண்டும் சிறைக்கு சென்றார் தர்ஷன். மேலும், 'நான் பல நாட்களாக சூரிய ஒளியையே பார்க்கவில்லை. எனது ஆடைகள் துர்நாற்றம் அடிக்கின்றன. இந்த சூழல் எல்லாம் என்னை சூழ்ந்துகொண்டு பயமுறுத்துகின்றன. இப்படி என்னால் வாழ முடியாது. தயவு செய்து எனக்கு விஷயம் கொடுத்து கொன்றுவிடுங்கள்' என்று கோரிக்கையும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டெவில் ரிலீஸ்: இப்படி தர்ஷனை சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே அவர் பிரகாஷ் இயக்கத்தில் டெவில் என்ற படத்தில் நடித்திருந்தார். இதில் அவருடன் ரச்சனா, மகேஷ் மஞ்ரேக்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். தர்ஷன் சிறைக்கு சென்றாலும்; தங்களில் ஒருவரை கொன்றாலும் அவரது படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக இருந்தார்கள். அதன்படி தியேட்டரில் திருவிழா போல் கொண்டாடவும் செய்தார்கள்.
உயிரிழந்த ரசிகர்: இந்நிலையில் டெவில் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை திருவிழா போல் கொண்டாடிவிட்டு திரும்பியபோது சிவாராஜ்புரா பகுதியில் புனீத் என்ற ரசிகர் பைக்கில் வந்துகொண்டிருந்தார். அதிவேகமாக வந்த அவர் பைக் பேருந்து மீது மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு 26 வயதுதான். இந்த சம்பவம் மேற்கொண்டு துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











