மோகினியை நம்பும் தனுஷ்
பரட்டை சுருட்டி விட்டதால் யாரடி நீ மோகினியை பெரிதும் நம்பியுள்ளாராம் தனுஷ்.
புயல் வேகத்தில் கிளம்பி, பொசுக்கென அமுங்கிப் போனவர் தனுஷ். துள்ளுவதோ இளமையில் அடையாளம் காணப்பட்டு, காதல் கொண்டேனில் வீறு கொண்டு, திருடா திருடியில் விஸ்வரூபம் எடுத்து, புதுக்கோட்டையில் சரவணன் மூலம் முடங்கிப் போனவர் தனுஷ்.கேரக்டர்களை செலக்ட் செய்து நடித்திருந்தால் நன்றாக வந்திருக்க வேண்டியவர், தயாரிப்பாளர்களை செலக்ட் செய்து, கதையை லூசில் விட்டு, கணக்கு வழக்கில்லாமல் சொதப்பியதால் மார்க்கெட் நலிந்து மடங்கிப் போனார்.
அவரை தூக்கி நிறுத்த உதவியது தேவதையைக் கண்டேன். இதையடுத்து திருவிளையாடல் ஆரம்பம் மூலம் மறுபடியும் தனுஷ் அலை எழுவது போலத் தோன்றியது. ஆனால் பரட்டை என்கிற அழகுசுந்தரம் வந்து தனுஷை மறுபடியும் நட்டாற்றில் விட்டு விட்டது.
இதனால் பெரும் சோர்வுக்குள்ளாகியுள்ளார் தனுஷ். இப்போது அவர் அதிகம் நம்பி இருப்பது அண்ணன் செல்வராகவனின் அசோசியேட் இயக்கும் யாரடி நீ மோகினி படத்தைத்தான்.
இப்படத்தை செல்வராகவன் இப்போது தெலுங்கில் அடவரி மடலகு அர்த்தரி வெருளே என்ற பெயரில் இயக்கி வருகிறார். அதே கதையை அப்படியே தம்பியையும், நயனதாராவையும் வைத்து தமிழுக்கும் கொண்டு வருகிறார்.
படப்பிடிப்பு முடிந்து விட்டதாம். நகாசு வேலைகள் பிரசாத் ஸ்டுடியோவில் வைத்து நடந்து கொண்டிருக்கிறதாம். பரட்டை தோல்வி குறித்து தனுஷ் என்ன நினைக்கிறார் என்று அறிய தனுஷைப் பிடித்தோம்.
பரட்டை குறித்து கேட்டபோது, படம் இப்போதுதான் வந்துள்ளது. அதற்குள் ரிசல்ட் குறித்துக் கூறுவது சரியாக இருக்காது. தீர்மானிக்கவும் முடியாது.
இந்தப் படம் எனக்கு ஏமாற்றம் கொடுத்துள்ளது. அதை நான் மறுக்கவில்லை. படத்தின் ஆரம்பம் முதலே எனக்கு சரியில்லை.
அடுத்த படத்தில் நிச்சயம் நல்ல ரிசல்ட்டைக் கொடுக்க முடியும் என நம்புகிறேன். யாரடி நீ மோகினியின் தெலுங்கு வெர்ஷன் ஆன அடவரி அங்கு ரிலீஸாகி விட்டது. படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்திருப்பதாக எனக்கு செய்திகள் வந்துள்ளன. சந்தோஷமாக உள்ளது.
அதேபோல யாரடி நீ மோகினியும் இங்கு சாதனை படைக்கும் என நம்புகிறேன்.
இனிமேல் கதையைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்கப் போகிறேன் என்றார் தனுஷ்.
ஆமாமா, ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும்ப்பா!


Click it and Unblock the Notifications











