பவர் பாண்டி... ‘சின்ன பாண்டி’யாக நடிக்கிறார் தனுஷ்?
சென்னை: ராஜ்கிரண் நடிப்பில் தான் இயக்கும் முதல்படத்தில் தனுஷ் கவுரவத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகராக மட்டுமின்றி தயாரிப்பு, பாடகர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவின் பல்வேறு தளங்களில் வெற்றியாளராக இயங்கி வருபவர் தனுஷ். தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ள தனுஷ், ராஜ்கிரணை நாயகனாக்கி புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு பவர் பாண்டி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார் தனுஷ். இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டண்ட்மேன் ஒருவரைப் பற்றிய கதைக்களம் தான் பவர் பாண்டி எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் தனுஷும் கவுரவத் தோற்றத்தில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜ்கிரணின் சிறுவயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் தனுஷ். தற்போது சென்னையில் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இயக்கம் ஒருபுறம் இருக்க, வடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களிலும் தனுஷ் நடித்து வருகிறார். மேலும், தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் 'கொடி' படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











