கிச்சா சுதீப்புடன் நடிக்கணும்னு ஆசை...! - தனுஷ்
கிச்சா சுதீப்புடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்று நடிகர் தனுஷ் கூறினார்.
ராக் லைன் வெங்கடேஷ் வழங்கும் ராம்பாபு புரொடெக்ஷன்ஸ் தயாரிக்கும் முடிஞ்சா இவன புடி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் இப்படத்தின் கதாநாயகன் கிச்சா சுதீப், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் , தயாரிப்பாளர் சூரப்பா பாபு இசையமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் மதன் கார்க்கி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் தனுஷ் ,சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகார்த்திகேயன்
விழாவில் நடிகர் சிவ கார்த்திகேயன் பேசியது, நான் பார்த்து வியந்த இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் அவர்களின் இசை வெளியீட்டு விழாவில் நான் அவர் அருகில் அமர்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. ரெமோ படத்தின் படபிடிப்பில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கலந்து கொண்டு எனக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுத்தார்.

பெண் வேடம்
ரெமோ படத்தில் நான் பெண் வேடத்தில் நடிக்கையில் அது எனக்கும் பெரிதும் உதவியது. வில்லன் படத்தில் அஜித் கடைபிடித்த சில விஷயங்களை எனக்கு கற்று கொடுத்து ரெமோ படத்தில் வரும் பெண் வேடத்தை மேலும் மெருகேற்றினார்.
டப்பிங்கில் நான் பெண் வேடத்துக்கு பேசும் போது இவ்வாறு பேச வேண்டும் என சில விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்தார்.
இக்கால ரசிகர்கள் ரசிக்கும் வகையிலான மிக சிறந்த படைப்பாக முடிஞ்சா இவன புடி நிச்சயம் இருக்கும். படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது அது எனக்கு நன்றாக இருக்கிறது. நான் மேடைக்கு வரும் போது விஜய் சேதுபதி அண்ணன் என்னை பார்த்து 'சிவா நீ சூப்பர் பிகர்' என்று கூறினார். இதற்கு முக்கிய காரணம் கே எஸ் ரவிக்குமார்," என்றார்.

விஜய் சேதுபதி
அடுத்ததாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி, "நான் சிவா நடித்த ரெமோ படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தேன். நிஜமாகவே மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார். நான் இப்படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளேன். முடிஞ்சா இவன புடி ட்ரைலர் நிஜமாகவே அருமையாக உள்ளது. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் அவர்கள் எப்போதும் இயக்குநர் ஜாம்பவான்தான். அவர் சிறந்த நடிகரும் கூட", என்றார்.

தனுஷ்
விழாவில் நடிகர் தனுஷ் பேசியது, "எனக்கு கிச்சா சுதீப்பை மிகவும் பிடிக்கும். நான் ஈ படத்தில் அவரின் நடிப்பை கண்டு வியந்தேன். நான் எந்த ஓர் நடிகரின் நடிப்பை பார்த்தும் வியந்து அவர்களுக்கு கால் செய்து பேசியது இல்லை. ஆனால் கிச்சா சுதீப் அவர்களுக்கு கால் செய்து அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

தேசிய விருது
நான் ஈ படத்தை பார்த்த மாபெரும் இயக்குநர் பாலு மகேந்திரா அவர்கள் சரியான தேர்வு குழு அமைந்தால் சுதீபுக்கு நிச்சயம் நேஷனல் அவார்ட் கிடைக்கும். நான் அந்த தேர்வுக் குழுவில் இருந்தால் நிச்சயம் உங்களுக்கு தேசிய விருது கொடுத்து இருப்பேன் என்று கூறினார். அதை நான் அவரிடம் சொல்வதற்கு சரியான இடம் இதுதான் என்று நினைக்கிறேன்.

ஆசை
எனக்கு சில நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்று அசை உண்டு சிவாவுடன் நான் நடித்துவிட்டேன், விஜய் சேதுபதியுடன் நடித்துவிட்டேன். மிக விரைவில் மீண்டும் நாங்கள் இணைந்து நடிக்கவுள்ளோம். ஆனால் எனக்கு கிச்சா சுதீப்புடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகம்", என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











