தனுஷை பார்த்து அந்த கேள்வியை கேட்ட பரிதாபங்கள் சுதாகர்.. இட்லி வாங்க காசில்லாத கதை!
சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் இட்லி கடை திரைப்படத்தை அவரே இயக்கியிருக்கிறார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்திருக்கிறார். அக்டோபர் ஒன்றாம் தேதி படம் வெளியாகவிருக்கிறது. இன்னும் சில நாட்கள் மட்டுமே இருப்பதால் ப்ரோமோஷன் பணிகளும் சூடு பிடித்திருக்கின்றன. அந்தவகையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தனுஷிடம் பரிதாபங்கள் சுதாகர் கேட்ட கேள்வியும் அவர் சொன்ன பதிலும் ட்ரெண்டாகியிருக்கிறது.
தனுஷ் நடிப்பில் கடைசியாக குபேரா, ராயன், கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் வெளியாகி வரிசையாக தோல்வியைத்தான் சந்தித்தன. குபேரா படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நன்றாக போனாலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. ராயன் படத்தின் நிலைமையை சொல்லவே வேண்டாம். அவரது 50ஆவது படமாக அது உருவாகியிருந்தது. தனுஷேதான் அப்படத்தை இயக்கியிருந்தார். இருப்பினும் படம் படுதோல்வியை சந்தித்தது.
முழு வீச்சில் தனுஷ்: அவர் ஹிட் கொடுத்து சில வருடங்கள் ஆகப்போகின்றன. கடைசியாக திருச்சிற்றம்பலம் படம்தான் அவருக்கு வெற்றியாக அமைந்தது. எனவே இன்னொரு தரமான வெற்றியை கொடுத்துவிட வேண்டுமென மும்முரமாக இருக்கிறார். இப்போது அவர் இட்லி கடை திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதில் அவருடன் சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

படம் எப்படி இருக்கும்?: இப்படத்தின் மீதும் வழக்கம்போல் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கவே செய்திருக்கின்றன. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் மேக்கிங் எல்லாம் நன்றாக இருக்கிறது; கதை வழக்கமானதுதானோ என்று கூறுகிறார்கள். அதேசமயம் கண்டிப்பாக ஹிட்டாகிவிட வேண்டும் என்ற நம்பிக்கையையும் அவர் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
தனுஷின் பேச்சு: இது ஒருபக்கம் இருக்க படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்டில் பேசிய தனுஷ், "சொந்த ஊரிலிருந்து மதுரைக்கு எனது அப்பா, அம்மா, அண்ணன் உள்ளிட்டோர் நடந்தேதான் வந்தார்கள். அங்கு வந்து உறவுக்காரர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு சினிமாவில் வந்து சேர்ந்தார் அப்பா. சிறு வயதில் எங்களுக்கு இட்லி சாப்பிட ஆசையாக இருக்கும். ஆனால் அப்போது எங்களிடம் காசு இருக்காது. நாங்கள் வயலில் சின்ன சின்ன வேலை செய்து அதில் வரும் காசு கொண்டு இட்லி சாப்பிட்டிருக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.
விளக்கமளித்த தனுஷ்: அவரது இந்தப் பேச்சு பெரிதாக ட்ரோலுக்கு உள்ளானது. இந்நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவரிடம் இதுகுறித்து பரிதாபங்கள் சுதாகர் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த தனுஷ்,"1983ஆம் ஆண்டுதான் நான் பிறந்தேன். 91ல்தான் அப்பா இயக்குநராக மாறினார். நாங்கள் நான்கு பிள்ளைகள் என்பதால் வீட்டில் 94 முதல் 95வரை அல்லாமே பட்ஜெட்தான். அதற்கு பிறகுதான் வாழ்க்கை மாறியது நாங்கள் நான்கு பேருமே வீட்டு கஷ்டத்தை புரிந்துகொண்டவர்கள். அதனால் வீட்டில் காசு கேட்க வேண்டாமென நாங்களே சிறு சிறு வயல் வேலைகளுக்கு சென்று அதில் கிடைக்கும் காசை வைத்து இட்லி வாங்கி சாப்பிடுவோம். அதனால்தான் அப்படி சொன்னேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











