மலையாளத்தில் வீரப்பன் கதை
சந்தனக் கடத்தல் வீரப்பன் டைப், கடத்தல்காரன் கதையை மலையாளத்தில் படமாக்கவுள்ளனர். சந்தனக் கள்ளன் என்பது படத்தின் பெயர்.
தமிழகத்தின் மேற்குப் பகுதி மலைகளை ஒரு காலத்தில் கட்டி ஆண்டவன் வீரப்பன். அவனது கதையை தமிழக அதிரடிப்படை போலீஸார் முடித்து வைத்தனர். இருந்தாலும் வீரப்பனின் பெயர் இன்னும் மறக்க முடியாத அளவுக்கு நீக்கமற நிறைந்திருக்கின்றன.
வீரப்பனின் கதையை ஏற்கனவே கன்னடத்தில் படமாக்கியுள்ளனர். தமிழில் படமாக்க முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி அதற்கு இடையூறாக இருக்கிறார்.
இந்த நிலையில் மலையாளத்தில் வீரப்பன் டைப் படம் ஒன்றை உருவாக்கவுள்ளனர். சந்தனக்கள்ளன் என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் திலீப், சந்தனக் கடத்தல்காரனாக நடிக்கவுள்ளார்.
பழம்பெரும் இயக்குநர் மது இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் கதைக்கும், சந்தனக் கடத்தல்காரன் வீரப்பனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மது கூறுகிறார். இருந்தாலும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் சாயல் படத்தின் கதையில் இருக்கும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஷூட்டிங்கைத் தொடங்கவுள்ளனராம். படம் வந்த பின்புதான் தெரியும், 'கள்ளன்' வீரப்பனா, இல்லையா என்பது!


Click it and Unblock the Notifications











