விஜயகாந்த்துக்கு அதெல்லாம் பிடிக்காது.. அதை செய்யவே மாட்டார்.. லிஸ்ட் போட்ட ஆர்.கே.செல்வமணி
சென்னை: விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நடிகர். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவர் கடந்த 2023ஆம் வருடம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது. நடிப்பு மட்டுமின்றி தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி விஜயகாந்த் குறித்து பேசியிருக்கும் விஷயம் படு ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜயகாந்த் என்றால் அனைவருக்குமே அவரது திடகாத்திரமான உடலும், கனீர் என்ற குரலும், கலையான உருவமும், அவர் செய்த உதவிகளும் உடனடியாக ஞாபகத்துக்கு வரும். அவரால் உதவி பெற்று பலனடைந்தவர்கள் சாமானியர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் உண்டு. விஜய், சூர்யா போன்ற இப்போதைய முன்னணி நட்சத்திரங்கள் வளர்ந்த காலகட்டத்தில் அவர்களின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்து அவர்களுக்கும், அந்தப் படங்களுக்கும் வெளிச்சத்தை பெற்றுத் தந்தவர் விஜயகாந்த்.
விஜய், சூர்யா மட்டுமில்லை: விஜய், சூர்யா ஆகியோருக்கு மட்டுமின்றி நடிகர் ஷாமுக்கும் உதவி செய்திருக்கிறார். தயாரிப்பாளர் ஒருவர் அடியாட்களை வைத்து ஷாமை மிரட்டியபோது நடிகர் சங்கர் தலைவராக இருந்தவர் விஜயகாந்த். விஷயம் கேப்டனின் காதுகளுக்கு சென்றதை அடுத்து; சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை ஃபோனில் தொடர்புகொண்டு எச்சரிக்க செய்தார். இந்த விஷயத்தை ஷாம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

அரசியலில் விஜயகாந்த்: இப்படி ஏகப்பட்ட நல்லதை செய்து தனக்கான செல்வாக்கை அதிகப்படுத்தியிருந்த அவர் அரசியலிலும் அடியெடுத்து வைத்தார். திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளையும் எதிர்த்து முதல் தேர்தலில் தனித்து போட்டியிட்ட அவர்; அடுத்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவராக மாறினார். தொடர்ந்து ஆக்டிவ் அரசியலில் இருந்த அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
உயிரிழப்பு: இதன் காரணமாக அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஆனால் அறுவை சிகிச்சை முடிந்தாலும் அவரது உடல்நிலை முன்னர் போல் இயல்பாக இல்லை. அதனையடுத்து அரசியலிலிருந்து ஒதுங்கிய அவருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. சூழல் இப்படி இருக்க அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியது. இந்தச் சூழலில் விஜயகாந்த்தை வைத்து புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கே.செல்வமணி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
செல்வமணி பேட்டி: தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தனது காலில் யாராவது விழுந்தாலோ, தனக்கு கூழை கும்பிடு போட்டாலோ விஜயகாந்த்துக்கு சுத்தமாக பிடிக்காது. இயல்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அவர் கீழே உட்கார்ந்திருக்கும்போது நீங்கள் மேலேகூட உட்காரலாம். அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்.அதேபோல் அவரது படுக்கையில் அவரின் உதவியாளர் யாராவது படுத்திருந்தால் எழுப்பக்கூட மாட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











